சிங்கப்பூர் ஆயுதப் படையின் துப்பாக்கிச்சூட்டுப் பயிற்சித் தளத்திற்கு அருகே சைக்கிளோட்டி ஒருவர்மீது தோட்டா பாய்ந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட தற்காப்பு அமைச்சு, பயிற்சித் தளத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதாக (ஜூன் 23) தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டுப் பயிற்சிகளும் உடனடியாக மீண்டும் தொடங்கும் என்று அமைச்சு குறிப்பிட்டது. அடுத்த துப்பாக்கிச்சூட்டுப் பயிற்சி இம்மாதம் 26ஆம் தேதி இடம்பெறவிருக்கிறது.
சிங்கப்பூர் ஆயுதப் படை மேற்கொண்ட விசாரணையில் பயிற்சி விதிமுறைகள், பாதுகாப்பு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என அனைத்தும் பயிற்சியின்போது பின்பற்றப்பட்டதாகவும் தற்காப்பு அமைச்சு கூறியது.
ஆயுதங்கள், துப்பாக்கிச்சூட்டுக்கான குறி வைக்கப்பட்ட இடம் போன்ற விதிமுறைகள் சரியாக இருந்தன.
இம்மாதம் 15ஆம் தேதி சிங்கப்பூர் ஆயுதப் படையின் துப்பாக்கிச்சூட்டுப் பயிற்சித் தளம் இருக்கும் நீ சூன் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 500 மீட்டர் தூரத்தில் நண்பர்களுடன் சைக்கிளோட்டிய 42 வயது ஆடவர்மீது தோட்டா பாய்ந்தது.
அந்தச் சமயத்தில் ஏறக்குறைய 2.3 கிலோமீடடர் தூரத்தில் வீரர்களின் துப்பாக்கிச்சூட்டுப் பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கருதி துப்பாக்கிச்சூட்டுப் பயிற்சிக்காக தடைசெய்யப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி சிங்கப்பூர் ஆயுதப் படை கேட்டுக்கொண்டது.
அத்தகைய பகுதிகளுக்குள் அத்துமீறி செல்வது ராணுவச் சட்டபடி குற்றமாகக் கருதப்படும் என்றும் அது குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் வேண்டுமென்றே சென்றதற்காகக் காயமைடந்த சைக்கிளோட்டி விசாரிக்கப்படுகிறார்.
ஜூன் 15ஆம் தேதி சைக்கிளோட்டியும் அவரது நண்பர்களும் பயணம் மேற்கொண்ட பாதையை அதிகாரிகளிடம் மறைக்க முற்பட்டிருக்ககூடும் என்று அறியப்படுகிறது.
‘தடைசெய்யப்பட்ட பகுதி, நுழையவேண்டாம்’ என்ற எச்சரிக்கையையும் மீறி சைக்கிளோட்டிகளும் நடைப்பயிற்சி மேற்கொள்வோரும் அத்தகைய பகுதிகளுக்குள் நுழைவதாகக் கூறப்படுகிறது.