சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15ஆம் தேதி) ‘முக்கியத் தகவலுக்கான’ சமிக்ஞை ஒலியை எழுப்பவிருக்கிறது.
அன்று மாலை 6.20 மணிக்குத் தீவு முழுவதும் அந்த ஒலி எழுப்பப்படும் என வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
பொது எச்சரிக்கை முறையின்கீழ் அந்த ஒலி ஒரு நிமிடத்துக்கு எழுப்பப்படும். அதைக் கேட்டுப் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
சமிக்ஞை ஒலியைக் கேட்டவுடன் உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி மூலம் ஒலி, ஒளிபரப்பப்படும் தகவலைக் கேட்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
‘எஸ்ஜிசெக்யூர்’ செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ள கைத்தொலைபேசிகளிலும் அந்தச் சமிக்ஞை ஒலியைக் கேட்க இயலும்.
பொது எச்சரிக்கை முறை குறித்த மேல்விவரங்களுக்கு go.gov.sg/pws என்ற இணைய முகவரியை நாடலாம்.

