வனவிலங்குப் பிரியர்களைச் சாகச உலகிற்கு அழைத்துச் செல்ல ‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஏஷியா’ எனும் ஆசியாவின் முதல் சாகச அடிப்படையிலான விலங்கியல் பூங்கா மார்ச் 12ஆம் தேதி சிங்கப்பூரில் திறக்கப்படவுள்ளது.
மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் ஐந்தாவது வனவிலங்குப் பூங்காவான இது, தெற்காசிய மழைக்காடுகளின் வளமான பல்லுயிரிச் சூழலைக் கண்டு மகிழ பார்வையாளர்களை வரவேற்கிறது.
பல கட்டங்களாகத் திறக்கப்படவுள்ள ‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட்’ பூங்காவின் முதல் பகுதியான ‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஏஷியா’ மழைக்காட்டின் வெவ்வேறு அங்கங்களை எடுத்துக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட எட்டு மண்டலங்களைக் கொண்டுள்ளது.
அடுத்த கட்டமாக ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகளைச் சித்திரிக்கும் ‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஆப்பிரிக்கா’ திறக்கப்படவுள்ளது. அது எப்போது திறக்கப்படும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர்க்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கும் உயர்த்தப்பட்ட நடைபாதைகளில் வருகையாளர்களும் நடந்து பூங்காவைச் சுற்றிப்பார்க்கலாம். மழைக்காட்டுச் சூழலை அனுபவிக்க விரும்புவோர், சற்று கடுமையான காட்டுப் பாதைகளில் மரத்துண்டுகளையும் நீரோடைகளையும் தாண்டி, மர உச்சிவரை ஏறிப் பார்க்கும் அனுபவத்தை பாதுகாப்பான முறையில் பெறலாம்.
நீரில் கரையக்கூடிய பாறைகளால் உருவான நிலவமைப்பான சுண்ணக்கரடுகளையும் (Karst Formation) பூங்காவில் காணலாம்.
சவாலான அனுபவங்களை விரும்புவோர் 20 மீட்டர் உயர்ந்த தளத்திலிருந்து குதிப்பது, மங்கிய குகைச் சுரங்கங்களில் பயணம் மேற்கொள்வது, வழிகாட்டியுடன் மூன்று மணி நேர சாகச சுற்றுலாக்களில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி ஈடுபடலாம்.
மலாயா புலிகள், ஜாவன் லங்கூர் குரங்குகள், கஞ்சில் சருகுமான், உவர்நீர் முதலை உள்ளிட்ட மொத்தம் 36 வகை உயிரினங்களை இந்தப் பூங்காவில் கண்டுகளிக்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
அழியும் அபாயத்திலுள்ள இனங்களான அரியவகை பிரான்சுவா லங்குர் குரங்குகளையும் பிலிப்பீன்ஸ் புள்ளிமான்களையும் இங்கு காணலாம்.
இந்தப் பூங்காவிலுள்ள அனைத்து உயிரினங்களும் மற்ற நான்கு மண்டாய் பூங்காக்களில் பிறந்தவை அல்லது அனைத்துலகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டவை.
“உலகின் ஆகச் செழுமையான பல்லுயிர்ச்சூழலைக் கொண்ட பகுதிகள் ஒன்றில் நாம் வாழ்கிறோம். இருப்பினும், பல விலங்கினங்கள், வாழ்விட இழப்பினாலும் மாசுபாடுகளாலும் அழிவின் ஆபத்தில் உள்ளன.
“நாம் அறியாததை நம்மால் பாதுகாக்க முடியாது என்ற கூற்றின்படி இந்தப் பகுதியின் அற்புதமான வனவிலங்குகள் குறித்து மேம்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம்,” என்று சொன்னார் மண்டாய் வனவிலங்கியல் குழுமத்தின் தலைமை நிர்வாகி மைக் பார்க்லே.
பூங்காவில் 7,000 தென்[Ϟ]கிழக்[Ϟ]காசிய மரங்களும் புதர்களும் இருக்கின்றன.
சிங்கப்பூரில் குகை போன்று வடிவமைக்கப்பட்ட முதல் உணவகம், தெற்காசிய உணவுகளை வழங்கும் உணவகம் உள்ளிட்ட நான்கு உணவகங்களில் வருகையாளர்கள் அமர்ந்து, சுவையான உணவை உண்டு ஓய்வெடுக்கலாம்.
சிங்கப்பூர்க் குடிமக்கள் www.mandai.com என்ற இணையத்தளம் வழியாக சிறப்புச் சலுகை விலையில் (பெரியவர்களுக்கு $33, 3 முதல் 12 வயது குழந்தைகளுக்கு $21, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்களுக்கு $20) நுழைவுச்சீட்டுகளைப் பெறலாம். இச்சலுகை 2025 மார்ச் 31 வரை மட்டுமே.
ஏப்ரல் 1 முதல் பெரியவர்களுக்கு $43 ஆகவும் குழந்தைகளுக்கு $31 ஆகவும் நுழைவுச்சீட்டுகளின் விலை உயரும். மூத்தவர்களுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஏஷியா’ நாள்தோறும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். கடைசி நுழைவு மாலை 5 மணிக்கு நிறைவடையும்.