சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், ‘மெர்சி ரிலீஃப்’ அமைப்பு, ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அகதிகள் ஆணையம் ஆகியவற்றுக்குப் புதன்கிழமை (மார்ச் 18) மனிதநேய நிவாரண நிதிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும், உள்துறை மூத்த துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வெள்ளம், ஆசிய வெள்ள நிவாரணம் மற்றும் சூடான் அவசர நிதி என்ற மூன்று பேரிடர்களுக்குச் சென்ற ஆண்டு ரஹ்மதான் லில் ஆலமீன் அறக்கட்டளை (RLAF) நிதி திரட்டியது.
திரட்டப்பட்ட நிதி, திரு ஃபைஷால் முன்னிலையில் காசோலையாக அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது.
மூன்று பேரிடர்களுக்கும் மொத்தம் $635,000 திரட்டப்பட்டதாக திரு ஃபைஷால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவ உதவி, கல்வி ஆதரவு போன்ற அவசரத் தேவைகளை வழங்குவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்,” என்றார் அவர்.
அறக்கட்டளையின்கீழ் காஸாவுக்கான (மீட்பு மற்றும் மறுவாழ்வு) அவசர நிவாரண உதவித் திட்டம் இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நிதிகளை ஏற்கிறது.
“இந்த அர்த்தமுள்ள முயற்சிக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்,” என்று திரு ஃபைஷால் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
கூடுதல் தகவல்களுக்கு https://rlafoundation.org.sg/ என்ற இணையப்பக்கத்தை பொதுமக்கள் நாடலாம்.

