சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை எட்டு எஃப்-35ஏ ரக போர் விமானங்களை வாங்கவுள்ளதாகத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் அறிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நான்கு எஃப்-35பி ரக விமானங்களை வாங்கவுள்ளதாக அறிவித்த நிலையில், அவ்வகையைச் சேர்ந்த மேலும் எட்டு விமானங்களை வாங்கவிருப்பதாகத் தற்காப்பு அமைச்சு சென்ற ஆண்டு அறிவித்திருந்தது.
வெவ்வேறு ஆற்றல் படைத்த இவ்விரு எஃப்-35 வகை விமானங்களும் ஆகாயப்படையின் செயல்திறனுக்கு வலு சேர்க்கும் என்றும் டாக்டர் இங் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 29) குறிப்பிட்டார்.
“மிகுந்த தாங்குதிறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள எஃப்-35ஏ விமானங்கள், செயல்திறன்மிக்க ஆயுதங்களையும் சுமந்துசெல்லும் வல்லமை படைத்தவை. எஃப்-35பி விமானங்கள் குறுகிய தொலைவில் மேலெழும்பும், செங்குத்தாகத் தரையிறங்கும் ஆற்றல் படைத்தவை,” என்று டாக்டர் ஹெங் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் 900க்கும் மேற்பட்ட எஃப்-35 விமானங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
எஃப்-35ஏ விமானங்களின் விலை குறித்த விவரங்களைத் தற்காப்பு அமைச்சு வெளியிடவில்லை. ஆயினும், அண்மைய அமெரிக்கப் புள்ளிவிவரங்களின்படி, அவை ஒவ்வொன்றும் 82.5 மில்லியன் அமெரிக்க டாலர் (S$111 மில்லியன்) விலைமதிப்புடையது எனக் காட்டுகின்றன. அதுபோல, எஃப்-35பி விமானத்தின் விலை US$109 மில்லியன் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.