அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமை (மார்ச் 25) வரலாறு காணாத அளவுக்குச் சரிந்தது. அது 29 காசு குறைந்து ஒரு டாலருக்கு 94.05 ரூபாயாக இருந்தது.
இந்தியாவிலிருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் (FII) அதிகப்படியான வெளியேற்றம், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ஆகியவை முதலீட்டாளர்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், நாணய மதிப்பு இவ்வாறு மாறியுள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, வலுவிழந்த டாலர், உள்நாட்டுப் பங்குச்சந்தைகளின் ஏற்றம் ஆகியவை உள்நாட்டு நாணயத்திற்கு நற்பலன் அளிக்கவில்லை என்று நாணயப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
புதன்கிழமை நாணயச் சந்தையின் தொடக்கத்தில், இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக 93.94 என்ற அளவில் தொடங்கி முடிவில் 94.05க்குச் சரிந்தது.
செவ்வாய்க்கிழமையன்று ரூபாயின் மதிப்பு, ஒரு டாலருக்கு 93.76ஆகப் பதிவானது.
“தற்போது பூசலில் ஈடுபட்டுவரும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏதேனும் உடன்பாடு ஏற்படும் எனச் சந்தைகள் எதிர்பார்த்ததால், டாலருக்கு எதிராகச் சிலவகைச் சொத்துகளின் மதிப்பு உயர்ந்தது,” என்று ஃபின்ரெக்ஸ் ட்ரெஷரி அட்வைசர்ஸ் நிறுவனத்தின் நிதித்துறைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனில் குமார் பன்சாலி கூறினார்.

