நீண்டகாலச் சேவை பதக்கம் பெற்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி ஒருவர் போதைப்பொருள் உட்கொண்ட குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.
ராகுல் டே அப்துல்லா, 50, எனப்படும் அவர், கடந்த 2022ஆம் ஆண்டு பதக்கம் பெற்றபோது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் மருத்துவச் சான்றிதழ் சோதனைப் பிரிவில் பணியாற்றினார்.
அவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ மெத்தம்ஃபேட்டாமைன் போதைப்பொருளை உட்கொண்டதாக ஜனவரி 13ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
2024 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வழக்கமான சிறுநீர் பரிசோதனையின்போது அவர் போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் அது பற்றி புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் அப்துல்லா வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

