கடற்பகுதிகளில் நிகழும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட வட்டார கடல்துறைப் பாதுகாப்புப் பயிற்சியில் 18 நாடுகள் பங்கேற்றன.
அதில் சிங்கப்பூரும் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய ஒத்துழைப்பு, பயிற்சி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வருடாந்தர பயிற்சி ஆகஸ்ட் 12லிருந்து 23 வரை நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில் சிங்கப்பூரைத் தவிர இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், வியட்னாம் ஆகிய ஐந்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் பங்கேற்றன. இவற்றுடன், இந்தியா, பங்ளாதேஷ், இலங்கை, தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மாலத் தீவுகள், பாலாவ், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் இந்தப் பயிற்சியில் பங்குகொண்டன.
அமெரிக்க கடற்படையின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியின் முதல் ஐந்து நாள்கள் கரையோரப் பயிற்சியைக் கொண்டிருந்தன. பின்னர், சாங்கி கடற்படைத் தளத்தில் உள்ள ‘ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா’ கப்பல் தளத்தில் ஒருவாரக் கடற்பகுதி பயிற்சி நடைபெற்றது.
இந்தக் கடற்பயிற்சியில் பங்குபெற்ற நிபுணர்களும் பங்கேற்பாளர்களும் கடல்துறையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தேவைப்படும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டனர்.