அரசாங்க சாதனங்களில் தேவையின் அடிப்படையில் மட்டுமே டிக்டாக் செயலி பயன்படுத்தப்படுவதாக சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
டிக்டாக் பயன்பாடு குறித்து CNA கேட்ட கேள்விக்கு அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்கக் குழுமத்தின் (SNDGG) பேச்சாளர் பதில் கூறினார்.
அரசாங்க சாதனங்கள் அரசாங்க வேலைக்காக மட்டுமே என்றும் அவற்றில் ஒப்புதல் பெற்ற செயலிகள் மட்டுமே பதிவிறக்கம் செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது டிக்டாக் செயலி தொடர்புப் பிரிவில் உள்ள அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் பல அரசாங்க சாதனங்களில் டிக்டாக் பயன்படுத்த தடைவிதித்துள்ளன.
தற்போது அந்தப் பட்டியலில் நியூசிலாந்தும் பிரிட்டனும் இணைந்துள்ளன.
டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்சில் சீனா அதிகமாக முதலீடு செய்துள்ளதால் தனிநபர் தகவல்கள் திருடப்படலாம் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.

