சிங்கப்பூர்க் காவல்துறை இரண்டு புதிய அதிநவீனப் பாதுகாப்பு வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாகனங்களின் அதிகாரபூர்வ அறிமுக நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (27 மார்ச்) மண்டாயில் உள்ள உள்துறைக் குழுவின் உத்திபூர்வ நிலையத்தில் நடைபெற்றது.
உள்துறைக் குழுவின் அறிவியல் தொழில்நுட்பப் பிரிவில் உள்ள நிபுணத்துவ ஆயுதக் கட்டமைப்பு நிலையத்துடன் இணைந்து சிங்கப்பூர்க் காவல்துறை இரண்டு வாகனங்களை உருவாக்கியுள்ளது.
அவற்றுள் ஒன்று உத்திபூர்வ வாகனம். அது கலகக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த வாகனத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக அது திகழ்கிறது.
அந்த வாகனத்தில் நெடுந்தொலைவு ஒலிச் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் மரணத்தை விளைவிக்காத வெடிகுண்டுகளை வீசும் தொலைதூரக் கட்டுப்பாட்டுக் கருவிகளும் இதில் இருக்கின்றன.
இதன்மூலம் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பான தொலைவிலிருந்து செயல்பட முடியும்.
தொடர்புடைய செய்திகள்
அச்சுறுத்தல்களைத் துல்லியமாகக் கையாள அந்தத் தொழில்நுட்பம் பெருமளவில் உதவுகிறது. அதனால் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் காயம் ஏற்படக்கூடிய ஆபத்து வெகுவாகக் குறையும்.
வாகனத்தின் முன்புறம் தடைகளை நீக்கும் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.
கலவரத்தின்போது தடைகளை அகற்றி வாகனத்திற்குச் சீரான பாதையை அமைக்க அது உதவும்.
அறிமுகம் செய்யப்பட்ட மற்றொன்று, அடுத்த தலைமுறை நீர் பீரங்கி வாகனம்.
காவல்துறையில் கடந்த இருபது ஆண்டுகளாகப் பழைய வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தன.
முந்தைய வாகனங்களைவிட அது அதிகத் தொலைவு செயல்படும் ஆற்றல் கொண்டது.
இலக்கைத் துல்லியமாக அடையாளம் காண அதில் தனித்தியங்கும் நிழற்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
வாகனத்தைச் சுற்றிலும் கலவரக்காரர்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவர்களைக் கலைத்து அப்புறப்படுத்தக்கூடிய அம்சங்களும் இதில் உண்டு.
அந்த நீர் பீரங்கி வாகனத்தில் மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் உதவித் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.
விபத்துக் குறித்து எச்சரிக்கவும் பார்வைக்குத் தட்டுப்படாத பகுதிகளைக் கண்டறியவும் அதில் வசதிகள் உள்ளன.
சாலைத் தடத்திலிருந்து வாகனம் விலகிச் செல்லும்போது எச்சரிக்கை மணி எழுப்பும் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் ஓட்டுநரின் சோர்வைக் கண்காணிக்கும் அமைப்பும் அதில் உண்டு.
சவாலான சூழ்நிலைகளில் அதிகாரிகள் நீண்ட நேரம் பணியாற்ற நேரிடலாம். அத்தகைய தருணங்களில் அவர்களுக்கு உடற்சோர்வு ஏற்படாத வகையில் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகத் திகழும் சிங்கப்பூரின் நற்பெயரைப் புதிய வாகனங்கள் உறுதி செய்வதாகச் சிறப்பு நடவடிக்கைகள் தளபத்தியத்தின் செயல்பாட்டுத் தலைவர் முகம்மது அட்னான் முகம்மது அக்பர் வலியுறுத்தினார்.

