சிங்கப்பூரின் நகரத் திட்டமிடல் துறை முன்னோடி ஆலன் சோ, மே 27ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 93.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) முதல் கட்டடக்கலைத் திட்ட வடிவமைப்பாளர் என்ற பெருமை அவரைச் சாரும்.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தைத் தோற்றுவித்தவர் என்ற சிறப்பும் அவருக்குண்டு.
அரசாங்கச் சேவையில் இருந்தபோது திரு சோ சிங்கப்பூருக்குப் பல்வேறு விதங்களில் சிறப்பாகப் பங்களித்தவர்.
சிங்கப்பூரின் நகர மேம்பாடு, மரபுடைமைப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அடித்தளமிட்டதிலும் செந்தோசாத் தீவைச் சிறந்த கேளிக்கை, குடியிருப்புப் பகுதியாக மாற்றியதிலும் அவருக்கு முக்கியப் பங்குண்டு.
திரு சோ தொலைநோக்குள்ள தலைவர் என்றும் சிங்கப்பூரின் நகர மேம்பாட்டுத் துறைத் தந்தை என்றும் மிகவும் பண்பட்ட மனிதர் என்றும் அவருடன் பணிபுரிந்தவர்கள் புகழாரம் சூட்டினர்.
1931ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி பிறந்த திரு சோ, பெர்ல்’ஸ் ஹில் பள்ளி, ராஃபிள்ஸ் கல்விக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றார். உயர்கல்விக்கு ஆஸ்திரேலியா சென்ற அவர், கட்டடக்கலை, நகரத் திட்டமிடல் போன்ற பாடங்களைக் கற்றார்.
1960ஆம் ஆண்டு வீவகவின் முதல் கட்டடக்கலைத் திட்ட வடிவமைப்பாளராகப் பணியில் சேர்ந்தார். குவீன்ஸ்டவுன் நகரம் அவர் வடிவமைப்பு, திட்டமிடலில் உருவானது.
தொடர்புடைய செய்திகள்
1974ல் நகர மறுசீரமைப்பு ஆணையத்தைத் தோற்றுவித்தார்.
திரு சோ, 1989ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் மரபுடைமை வட்டாரங்களை அரசிதழில் அறிவிக்கும் திட்டத்துக்கு வழிகோலினார். தற்போது 7,200க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இவ்வாறு பேணப்படுகின்றன.
திரு சோ, 1985 முதல் 2001ஆம் ஆண்டு வரை, செந்தோசா மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

