சிங்கப்பூர் இரண்டாவது முறையாக மருத்துவ, உணவுப் பொருள்களை விமானம் மூலம் காஸாவில் போடவிருப்பதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
உதவிப் பொருள்களுடன் சிங்கப்பூர் ஆகாயப்படையின் சி-130 ரக போக்குவரத்து விமானம் பாயா லேபார் ஆகாயப்படைத் தளத்திலிருந்து ஜோர்தானுக்கு இன்று காலை (ஆகஸ்ட் 12) புறப்பட்டது.
ஜோர்தானிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இதர வெளிநாட்டு ஆகாயப் படைகளுடன் சிங்கப்பூரும் கைகோத்தது.
நிவாரணப் பொருள் விநியோகத்தில் மொத்தம் 58 தற்காப்பு, ராணுவ அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
சுகாதார அமைச்சு மருத்துவப் பொருள்களை வழங்கியது. ஹுமேனிடி மேட்டர்ஸ், மெர்சி ரிலிஃப் போன்ற அரசாங்க சார்பற்ற அமைப்புகள் உணவுப் பொருள்களை வழங்கின.
சாங்கி வட்டார மனிதநேய உதவி அமைப்பும் பேரிடர் நிவாரண ஒருங்கிணைப்பு நிலையமும் முயற்சியை ஒருங்கிணைத்தன.
கடந்த ஆண்டு மார்ச் 24ஆம் தேதி காஸாவுக்கு முதல்முறையாக அவசரப் பொருள்களை ஆகாயம் வழி அனுப்பியது சிங்கப்பூர் ஆயுதப் படை.
காஸாவுக்கு சிங்கப்பூர் அனுப்பும் மனிதநேய உதவிகளில் இது 9வது முறை. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து சிங்கப்பூர் $22 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள உதவிப் பொருள்களைக் காஸாவுக்கு அனுப்பியுள்ளது.