ஈரான் போர் மோசமடைந்துவரும் நிலையிலும் மத்திய கிழக்குப் பல்கலைக்கழகங்களில் பயிலும் 40க்கும் அதிகமான சிங்கப்பூர் மாணவர்கள் நாடு திரும்ப விரும்பவில்லை.
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் அங்கேயே இருக்க விரும்புகின்றனர். மறுபடியும் அங்குப் போக முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் கல்வியை முடிக்கவேண்டும் என்ற எண்ணமும் அவர்கள் நாடு திரும்ப யோசிப்பதற்கான காரணங்கள்.
அத்தகைய மாணவர்களில் ஒருவர் 22 வயது சிட்டி ஃபாத்திமா அப்துல் ரஷித். இஸ்லாமிய சட்டத்தின் அர்த்தங்களைப் புரிந்துகொள்வதற்கான கல்விப் பாடத்தை மேற்கொள்ள அவர் 2023ஆம் ஆண்டு ஜோர்தானில் உள்ள இர்பிட் நகருக்குப் போனார்.
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அடிக்கடி அபாய ஒலியைக் கேட்கும் அவர், “என்ன நடக்கிறது என்பதை இங்குள்ள அரசாங்கம் தக்க நேரத்தில் அறிவித்து வருகிறது. அதனால், இங்கு பாதுகாப்பாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன்,” என்றார்.
“இங்கேயே இருந்து பாதுகாப்பு நாடி கல்வியில் கவனம் செலுத்துமாறு எனது குடும்பம் என்னை ஊக்குவித்தது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மற்ற சில மாணவர்களும், இப்போது வெளியேறினால் பின்னர் திரும்பிவர முடியாமல் போய்விடக்கூடும் என்று அச்சம்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
ஸாய்ட் கஸாலி, 26, ரமலான் காலத்தைக் குடும்பத்தாருடன் செலவழிக்க சவூதி அரேபியாவின் புனித நகரான மடினாவிலிருந்து சிங்கப்பூர் திரும்ப மூன்று மாதங்களுக்கு முன்பு விமானப் பயணச்சீட்டுகளை வாங்கினார்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 6) அவர் விமானத்தில் ஏறினார். ஆனால், தான் மேற்கொள்ளும் இஸ்லாமியக் கல்வி பட்டக் கல்வியை முடிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை அவருக்கு இருந்ததாகத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
திரு ஸாய்ட், 2022ஆம் ஆண்டிலிருந்து மத்திய கிழக்கில் வசித்து வருகிறார். மடினாவில் கடைகன் தொடர்ந்து திறந்திருப்பதாகவும் சாலைகளில் போக்குவரத்து எந்த வகையிலும் குறையவில்லை என்றும் தெரிவித்தார்.
இருந்தாலும், ஒருவகை குழப்பநிலை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மத்திய கிழக்கில் சில மாணவர்கள் இப்போது மெய்நிகரில் தங்களின் கல்வியை மேற்கொள்கின்றனர். குவைத் பல்கலைக்கழகத்தில் தான் மேற்கொள்ளும் இஸ்லாமிய பட்டக் கல்விப் பாடங்கள் இப்போது இணையத்தில் நடத்தப்படுவதாக 22 வயது ஜாபிர் கமால் கூறினார்.

