ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக தாயகம் வந்தடைந்தனர்.
மத்திய கிழக்கிலிருந்து சிங்கப்பூரர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டாவது விமானமும் பாதுகாப்பாக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) சிங்கப்பூர் வந்து சேர்ந்தது.
அந்த விமானத்தில் 167 சிங்கப்பூரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் இருந்ததாக வெளியுறவு அமைச்சின் சமூக ஊடகப் பதிவு குறிப்பிட்டது.
மஸ்கட் நகரிலிருந்து சிங்கப்பூர் நேரப்படி மதியம் 2.51 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) இரவு 9:20 மணியளவில், சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இந்த அறிவிப்பு, தகவல் திரையில் வெளியான அடுத்த நொடி தங்கள் உறவினர்களை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்தவர்கள் ஆரவாரத்துடன் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
ஈரான் போரால் நாடுகள் பலவும் புவிசார் பதற்றங்களால் சூழப்பட்டுள்ளன.
இதற்கிடையே, போரின் தாக்கத்தில் சிக்கியுள்ள வட்டாரத்தில் இருக்கும் தங்கள் நாட்டவர்களைப் பத்திரமாக மீட்க உலக நாடுகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
அவ்வகையில், வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்த முதல் விமானத்தில் சனிக்கிழமை (மார்ச் 7) 152 சிங்கப்பூரர்களும் அவர்களது குடும்பத்தினரும் பாதுகாப்பாக சிங்கப்பூர் வந்திறங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது விமானத்தில் பாதுகாப்பாக நாடு திரும்பியவர்களில் பலரும் மீட்பு நடவடிக்கைகளை சிறப்பாக ஒருங்கிணைத்த அரசின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
இத்தகைய அவசரகாலங்களின் போது ஒருவருக்கொருவர் உதவும் நோக்குடன், சிங்கப்பூரர்களைத் தவிர புருணை, இந்தோனீசியா, மலேசியா, தென் கொரியாவைச் சேர்ந்த குடிமக்களும் இந்த விமானத்தில் அழைத்து வரப்பட்டதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

