ஈரான் போரால் மத்திய கிழக்கில் சிக்கித்தவித்த சிங்கப்பூரர்கள் சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப் படை விமானம் மூலம் புதன்கிழமை (மார்ச் 11) தாயகம் வந்து சேர்ந்தனர்.
சவூதி அரேபியாவில் உள்ள சிங்கப்பூரர்களைத் தாயகம் அழைத்து வருவதற்காக தலைநகர் ரியாத்திற்குச் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அனுப்பப்பட்ட சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப் படையின் A330 வகை விமானம் 218 சிங்கப்பூரர்களையும் அவர்களைச் சார்ந்தோரையும் ஏற்றிக்கொண்டு பத்திரமாகத் தாயகம் திரும்பியது.
காலை 6.02 மணியளவில் சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய செய்தியை அறிந்த உறவினர்கள், மிகுந்த ஆவலோடு தங்கள் குடும்பத்தாரை வரவேற்க ஆயத்தமாகினர்.
மத்திய கிழக்கில் பரிதவித்த குடும்பத்தினரை நேரில் கண்ட உறவினர்கள் அவர்களைக் கண்ணீர்மல்க வரவேற்று மகிழ்ந்தனர்.
இதுவரை மீட்கப்பட்டவர்களில் இதுவே ஆக அதிக எண்ணிக்கை.
இதற்கிடையே, விமான நிலையத்தில் காலை 5:30 மணிவாக்கில் செய்தியாளர்களைச் சந்தித்த தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, ஆகாயப் படையின் விமானம் மூலம் சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
‘‘சிங்கப்பூரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றிணைவதைப் பார்ப்பது நிம்மதி அளிக்கிறது.
‘‘போர் பரவியுள்ள பகுதிகளில் சிக்கியிருக்கும் சிங்கப்பூரர்களை மீட்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்குப் பிரதமர் லாரன்ஸ் வோங் உறுதியளித்துள்ளார்,’’ என்ற திரு ஸாக்கி, இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேசம் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ‘சிங்கப்பூரர்களின் நலன் காக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவுகளையும் அரசு வழங்கும்,’’ என்றும் அவர் கூறினார்.
இதற்குமுன் கடந்த வார இறுதியில் ஓமான் தலைநகர் மஸ்கட்டிலிருந்து இருமுறை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் மூலம் சிறப்புப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவற்றில் 319 சிங்கப்பூரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் நாடு திரும்பினர்.
சவூதி அரேபியாவுக்கு பிரதமர் லாரன்ஸ் வோங் நன்றி
இதற்கிடையே, மத்திய கிழக்கிலிருந்து சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு உறுதியான ஆதரவை வழங்கிய சவூதி அரேபியா மற்றும் அவ்வட்டாரத்தில் உள்ள இதர பங்காளிகளுக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங் நன்றி தெரிவித்துள்ளார்.
அவ்வட்டாரத்தில் தங்கியிருக்கும் சிங்கப்பூரர்களை விழிப்புடனும் ஒருவருக்கொருவர் துணையாகவும் இருக்கும்படி திரு வோங் கூறினார்.
மேலும், அவசியம் ஏற்பட்டால் உடனுக்குடன் தொடர்புகொள்வதற்கு ஏற்ற வகையில் சிங்கப்பூரர்கள் வெளியுறவு அமைச்சுடன் தங்கள் விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

