தாய்மொழி கற்பதிலிருந்து விலக்கு பெற்ற பிள்ளைகளுக்கான தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) மதிப்பீட்டு முறையை மாற்றும்படி கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கும் புதிய இணைய மனுவைப் பெற்றோர்கள் தொடங்கியுள்ளனர்.
மேரியன் வீ என்ற பெற்றோர் கடந்த சனிக்கிழமை “change.org” இணையத்தளத்தில் பதிவேற்றிய அந்த மனுவில் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். புதிய மதிப்பீட்டு முறையால் தங்கள் பிள்ளைகள் பாதிப்படைவார்கள் என திருவாட்டி வீயும் மனுவில் கையெழுத்திட்ட மற்ற பெற்றோர்களும் நம்புகின்றனர்.
தற்போதைய மதிப்பீட்டு முறையின்கீழ், தாய்மொழி கற்காத மாணவர்கள் மற்ற பாடங்களில் அடையும் தேர்ச்சியின் அடிப்படையில், அதேபோன்ற தேர்ச்சிபெற்ற மற்ற மாணவர்களின் தாய்மொழி தேர்ச்சியைக் கொண்டு, நான்கு பாடங்களுக்கான மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால், 2021ஆம் ஆண்டு நடப்புக்கு வரும் புதிய மதிப்பீட்டு முறையின்கீழ், ஒவ்வொரு பொதுப் பாடத்திற்கும் ஏஎல்1 முதல் ஏஎல்8 வரையிலான அடைவுநிலைகள் வழங்கப்படும். இதில் ஏஎல்1 என்பது ஆகச்சிறந்த தேர்ச்சி.
(இதையும் படிக்க: கல்வி அமைச்சு: தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை மதிப்பீட்டு முறை பிரதிபலிக்கவேண்டும்)
இதன் அடிப்படையில், நான்கு பாடங்களுக்கான மொத்த பிஎஸ்எல்இ மதிப்பெண் 4 முதல் 32 வரை இருக்கும்.
அடிப்படைப் பாடங்களைக் கற்கும் மாணவர்களுக்கு ஏஎல்6 முதல் ஏஎல்8 வரையிலான அடைவுநிலை மதிப்பெண்கள் வழங்கப்படும். தாய்மொழி கற்பதிலிருந்து விலக்குபெற்ற மாணவர்களுக்குத் தாய்மொழிக்கான மதிப்பெண் வழங்கப்படும். ஆனால், இந்த மதிப்பெண் ஏஎல்6 முதல் ஏஎல்8 வரையில் இருக்கும்.
“அடிப்படைப் பாடங்களின் மதிப்பெண் அடைவுநிலை 6 முதல் 8 வரையில் இருப்பதால், தாய்மொழித் தேர்வு எழுதாத மற்றொரு மாணவருக்கு அதைவிட நல்ல மதிப்பெண் வழங்குவது நியாயமில்லை. ஏனெனில், சிறப்புத் தேவைகள் உள்ளோர் உட்பட பல மாணவர்கள் விலக்கல் கோராமல் அடிப்படைப் பாடமாகத் தாய்மொழியைக் கற்கின்றனர்,” என்று கல்வி அமைச்சு விளக்கமளித்தது.
ஆனால், இந்த மாற்றங்கள் எதிர்பாராததாகவும், நியாயமற்றதாகவும், மிகவும் குறைவாகவும் இருப்பதாகத் திருவாட்டி வீ கூறுகிறார்.
தொடக்கநிலை மூன்றாம் வகுப்பில் பயிலும் இவரது மகள் பாலர் பள்ளியிலும் தொடக்கநிலை முதலாம் வகுப்பிலும் சீன மொழி கற்றார். ஆனால், மகளின் சிரமத்தைக் கண்டு, பிரெஞ்சு மொழிக்கு அவர் மாற்றிவிட்டார்.
கல்வி அமைச்சு “இதுபோன்ற மாற்றம் செய்திருக்கும் எனத் தெரிந்திருந்தால், ஒருவேளை தொடர்ந்து சீன மொழி படிக்க வைத்திருப்பேன்,” என்றார் அவர்.
ஏற்கனவே தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தற்போதைய மதிப்பீட்டு முறையை நிலைநாட்டும்படி அவரும் மற்ற பெற்றோர்களும் அமைச்சிடம் கோருகின்றனர். அதே சமயத்தில், கற்றல் குறைபாடுகள் உள்ள பிள்ளைகளின் பெற்றோர்கள் வேறு காரணங்களுக்காக இந்த மாற்றத்தை எதிர்க்கின்றனர்.
கற்றல் குறைபாடுகளினால் ஏற்கனவே சிரமப்படும் தங்களது பிள்ளைகள், புதிய மதிப்பீட்டு முறையால் மேலும் பாதிப்படைவார்கள் என்று ஒரு பெற்றோர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.