குதூகலத்துடன் தைப்பூசம்; கொரோனா கிருமிப் பரவல் அச்சுறுத்தினாலும் குறைந்திடாத காவடிகள்

குதூகலத்துடன் தைப்பூசம்; கொரோனா கிருமிப் பரவல் அச்சுறுத்தினாலும் குறைந்திடாத காவடிகள்

3 mins read
d15352a7-05c1-4522-9b52-f57f011010bd
அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள். படங்கள். த. கவி -
multi-img1 of 3

கொரோனா கிருமித்தொற்று பரபரப்புக்கிடையே, இவ்வாண்டின் தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொண்டோரின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சிங்கப்பூரில் நோய்ப்பரவல் விழிப்புநிலைக் குறியீடு (டோர்ஸ்கோன்) ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தப்பட்ட மறுநாளான இன்று (பிப்ரவரி 8) தைப்பூசத் திருவிழாக் கொண்டாட்டங்கள், சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுடன் தொடர்ந்தன. கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கில் முதன்முறையாக ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆலயத்தின் இரண்டு நுழைவாயில்களில் வெப்பமானிகள் பொருத்தப்பட்டிருந்தன.

அவற்றுக்கருகே மருத்துவ சோதனைகளுக்காகத் தொண்டூழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

பக்தர்களின் பயன்பாட்டுக்காகக் கிட்டத்தட்ட 5,000 முகக்கவசங்களும் 50 லிட்டர் கிருமிநாசினியும் தயாராக வைக்கப்பட்டிருந்ததாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது. கிருமித்தொற்று நிலவரத்தை கடந்த சில வாரங்களாக கண்காணித்து வந்ததாக ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆலயத்தின் செயலாளர் சிவகுமரன் சாத்தப்பன் தெரிவித்தார்.

"நிலைமை மேலும் மோசமாகும்வரை காத்திராமல் ஏற்கெனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்தினோம். இதற்காக தற்காப்பு அமைச்சுடன் ஒத்துழைத்தோம்," என்று அவர் கூறினார். மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக சுகாதார ஆலோசனைக் குறிப்புகள் வெளியிடப்பட்டதாக திரு சிவகுமாரன் கூறினார்.

"உடல்நலம் சரியில்லாத பக்தர்களை வீட்டிலேயே இருக்குமாறு ஆலோசனை வழங்கினோம். நேர்த்திக்கடனை நிறைவேற்ற ஆலயத்துக்கு வர விரும்புவோர் முகக்கவசங்களை அணியவேண்டும் என அறிவுறுத்தினோம்," என்றார். அவ்வாறு முகக்கவசத்தை அணிந்தவாறு நேர்த்திக்கடன்களைச் செலுத்தியவர்களில் 43 வயது சிவக்குமாரும் ஒருவர்.

"நேற்றிலிருந்து எனக்கு சளியும் இருமலுமாக இருந்தது. வேண்டுதலை நிறைவேற்றும் அதே நேரத்தில், சமூகப் பொறுப்புடன் செயல்படவேண்டும் என விரும்பினேன்," என்றார் வர்த்தக இயக்குநரான திரு சிவா. திரு சிவாவைப்போல முகக்கவசங்களுடன் வந்திருந்தவர்கள் வெகு சிலரே என்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பொருமாள் ஆலயத்தின் மருத்துவக் குழு தொண்டூழியர்கள் தெரிவித்தனர்.

அதே போல, அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்திற்கு எவரும் காய்ச்சலுடன் வரவில்லை என்று அந்த ஆலயத்தின் செயலாளர் ஆர். எம். முத்தையா தெரிவித்தார்.

"கிட்டத்தட்ட 20 பேர் அவர்களாவே எங்களது மருத்துவ உதவிக் குழுவினரை அணுகினர். ஒருசிலருக்குக் களைப்புத் தவிர வேறு பெரிய உபாதை இல்லை. பாதிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்துவதற்கான அவசியமும் ஏற்படவில்லை," என்றார் அவர். டோர்ஸ்கோன் ஆரஞ்சு நிறத்தில் இருந்தாலும் மக்களில் பெரும்பாலானோர் நிதானத்துடன் இருப்பதாக தைப்பூசக் கொண்டாட்டங்களின் சிறப்பு விருந்தினரான வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.

வாழ்க்கை எப்போதும்போல தொடர வேண்டும் என்றும் தேவையான, சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டால் நாம் வழக்கம் போல இருக்கலாம் என்றும் திரு சான் குறிப்பிட்டார்.

இத்திருவிழாவில் இந்துக்கள் மட்டுமின்றி பிற சமயத்தினரும் இனத்தினரும் தொண்டூழியர்களாகப் பங்காற்றியதை அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இத்திருவிழாவில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பு, சிங்கப்பூரின் அனைவரையும் உள்ளடக்கிய மனப்பான்மையைக் காட்டுவதாக திரு சான் கூறினார். முதன்முறையாக அலகுக்காவடி சுமந்த 16 வயது ஹரிஹர், நோய்ப்பரவல் குறித்து அச்சமில்லை என்றார். 30 ஆண்டுகளாகக் காவடி எடுக்கும் 56 வயதான திரு விஜயந்திரன் நாராயணசாமியும் இதே போன்ற கருத்தை வெளிப்படுத்தினார். இவ்வாண்டின் தைப்பூசத்தில் பங்கேற்ற பக்தர்கள், காவடிகள், பால்குடம் ஆகியவற்றுடன் மேலும் விரிவான செய்திகளுக்கு நாளைய தமிழ் முரசு அச்சுப் பிரதியைப் படியுங்கள்!

#சிங்கப்பூர் #தைப்பூசம் #கொரோனா #காவடி

குறிப்புச் சொற்கள்