லிட்டில் இந்தியாவில் இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டம் கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கட்டுப்பாடுகளுடன் ஏற்பாடு செய்யப்படுகிறது.
பெரிய அளவிலான தீபாவளிச் சந்தை, மக்கள் கூடும் பிரம்மாண்ட மேடை நிகழ்ச்சிகள் எல்லாம் இவ்வாண்டு இடம்பெறாது. பதிலாக, இணையம் வழியான முயற்சிகள் மூலம் கொண்டாடக் களையை ஏற்படுத்த முற்படுகிறது லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் சங்கம்.
அக்டோபர் 3ஆம் தேதி தீபாவளி ஒளியூட்டு மெய்நிகர் நிகழ்ச்சியாக நடைபெறும். தொலைக்காட்சியில் ஒளியேறும் இந்நிகழ்ச்சியை துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் சிறப்பிப்பார்.
கேம்பல் லேன் முதல் ஹேஸ்டிங்ஸ் வரையிலான கொண்டாட்ட ‘கிராமமும்’ சிராங்கூன் பிளாசா கடைத்தொகுதிக்கு அருகில் நடைபெறும் சந்தையும் இவ்வாண்டு அநேகமாக இடம்பெறாது என திரு சங்கத்தின் தலைவர் ராஜகுமார் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
எனினும், கேம்பல் லேனில் தீபாவளிப் பொருட்களை விற்கும் கடைகள் அமைக்கப்படும். வெளிநாட்டு விற்பனையாளர்கள் வராததால் பலகாரங்கள், துணிமணிகளுக்கான தெரிவுகள் குறைந்தாலும் முக்கியமான பொருட்கள் தடையின்றிக் கிடைக்கும் என்றார் அவர்.
நேரில் கடைகளை அமைக்க இயலாதவர்கள் littleindia.com.sg தளத்தில் அமைக்கப்பட உள்ள ‘இணையச் சந்தை’யில் பங்கேற்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு நாளைய தமிழ் முரசின் (செப்டம்பர் 26) அச்சுப் பிரதியை நாடுங்கள்!