பிரபல குறுங்காணொளிச் செயலியான ‘டிக்டாக்’, அதன் உலகளாவிய விரிவாக்கத் திட்டங்களுக்காக சுமார் 3,000 பொறியாளர்களை வேலையில் அமர்த்தவுள்ளது.
இதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் சிங்கப்பூர், ஐரோப்பா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்களை நிறுவனம் நியமிக்கவுள்ளதாக நேற்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அது தெரிவித்தது.
‘டிக்டாக்’ கையாளும் தனிநபர் தரவு குறித்த பாதுகாப்பு தொடர்பில் அக்கறை எழுந்ததால் அதைக் கைவிடுமாறு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனாவின் ‘பைட்டான்ஸ்’ நிறுவனத்திற்கு உத்தரவு இட்டிருந்தார்.
செயலியின் உரிமைத்துவம் குறித்து இவ்வாறு ஒரு நிச்சயமற்ற நிலை இருக்க, பொறியாளர்களை வேலைக்கு எடுக்கவுள்ள தன் திட்டத்தை ‘டிக்டாக்’ அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் பொறியியல் மையங்களில் ஒன்றாக அமெரிக்கா தொடர்ந்து இருக்கும் என்றும் மேலும் ஊழியர்கள் சேர்க்கப்படுவர் என்றும் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
‘டிக்டாக்’ நிறுவனத்தில் தற்போது பணிபுரிந்து வரும் சுமார் 1,000 பொறியாளர்கள், சீனா அல்லாமல் வேறு இடங்களில் உள்ளனர்.
அவர்களில் பாதி பேர், கலிஃபோர்னியாவின் மவுண்டன் வியூவில் இருந்து வேலை பார்க்கின்றனர்.
சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு செய்திகள் தமிழ் முரசு இணையப் பக்கத்தில் வெளியிடப்படுகின்றன. பொதுச் சேவைத் துறை (Public/Civil Service) பணிகளும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. 12 பிரிவுகளில் சுமார் 14,000 வேலை வாய்ப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ள: https://www.tamilmurasu.com.sg/jobs