சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்தியர்கள்: தாயகத்துக்குச் சென்றவர்கள் திரும்பி வர இயலாமல் தவிப்பு

சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்தியர்கள்: தாயகத்துக்குச் சென்றவர்கள் திரும்பி வர இயலாமல் தவிப்பு

2 mins read
a96001a2-2c24-4f8d-9343-39f536c0f894
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் பணிபுரியும் திரு பெஸ்டின் பென்னியின் வேலை அனுமதி வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி காலாவதியாகிறது.

இந்திய நாட்டவரான திரு பெஸ்டின் ஊருக்குச் சென்றிருக்கிறார். சிங்கப்பூருக்குத் திரும்பி வந்து இங்கு பணியைத் தொடர விரும்புகிறார். ஆனால், மனிதவள அமைச்சு இன்னும் அவருக்கு அனுமதி வழங்கவில்லை.

"என் சகோதரர் ஜெஸ்டினின் வேலை அட்டை காலாவதியாவதற்கு முன் அவர் சிங்கப்பூர் திரும்பாததால் வேலையை இழந்துவிட்டார். அதே நிலை எனக்கு ஏற்பட்டுவிடக்கூடாது. நானும் என் வேலையை இழந்துவிட்டால் வருமானம் போய்விடும். எப்படியாவது சிங்கப்பூருக்குத் திரும்ப முயற்சி செய்கிறேன். ஆனால் அதற்கான செயல்முறை மெதுவாக இருப்பதால் எனக்குப் பைத்தியமே பிடிக்கிறது," என்றார் 29 வயது திரு பெஸ்டின். இவர் கேரளாவின் பாலக்காட்டில் சிக்கித் தவிக்கிறார்.

இயந்திரம் பொருத்தும் வேலையில் இருக்கும் திரு பெஸ்டின், தம் திருமணத்திற்காக இவ்வாண்டு மார்ச் 20ஆம் தேதியன்று இந்தியாவுக்குச் சென்றார். அதன் பின், தமது கடல்துறை நிறுவனத்தின் மூலம் மனிதவள அமைச்சுக்குப் பலமுறை விண்ணப்பித்தும், 'இல்லை' என்ற பதிலே அவருக்குத் தொடர்ந்து வந்தது.

திரு பெஸ்டினைப் போலவே இந்திய நாட்டவர் பலர், சிங்கப்பூரில் வேலையை வைத்துக்கொண்டு தங்களின் தாயகம் சென்று, மீண்டும் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

இவ்வாறு சிக்கிக்கொண்டவர்கள், இந்தியாவில் தங்களுக்குள்ளேயே ஆதரவுக் குழுக்களை அமைத்துக்கொண்டு அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் உதவியை நாடி வருவதாக இந்தியா வெளியிட்ட அறிக்கைகள் கூறுகின்றன.

மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைவதற்காக மனிதவள அமைச்சின் அனுமதியைப் பெறுவதில் உள்ள சிரமத்தை உணர்ந்து, இங்கு வேலை செய்யும் இந்திய நாட்டவர் பலர், இனி நன்கு யோசித்த பின்னரே தங்களின் தாயகம் திரும்புவர் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சு:

வேலை விசா வைத்துள்ள இந்திய நாட்டவர், சிங்கப்பூர் திரும்ப எண்ணினாலும் தற்போது அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதை மனிதவள அமைச்சும் சிங்கப்பூரின் இந்திய தூதரகமும் அறிந்திருப்பதாகத் தெரிவித்தன. இருப்பினும், வெளிநாட்டிலிருந்து வருவோரால் கொவிட்-19 கிருமிப் பரவல் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, அவர்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கட்டுப்பாடு தொடர்ந்து இருப்பதாக மனிதவள அமைச்சு கூறியுள்ளது. இதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் தூதரகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்