கடந்த ஐந்தாண்டுகளில் தீவிரவாதப் போக்கிற்கு மாறிய 29 பேர் மீது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மனிதவள அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான திருவாட்டி ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.
அவர்களில் பெரும்பாலானோர் இணையத் தீவிரவாதப் பிரசாரம் மூலமாக அப்போக்கிற்கு மாறியதாகக் கூறப்பட்டது.
‘ஹியுமானிட்டி மேட்டர்ஸ்’ எனும் உள்ளூர் அரசு சாரா நிறுவனம், தீவிரவாதப் போக்கிற்கு மாறுவது தொடர்பில் ‘சீக்கிங் த இமாம்’ எனும் 25 நிமிட குறும்படத்தை எடுத்தது. ஃபுராமா ரிவர்ஃபிரண்ட் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற அப்படத்தின் திரையீட்டு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் டியோ, பயங்கரவாத, தீவிரவாத அச்சுறுத்தல்களை அண்டவிடாதிருப்பதில் இன, சமய நல்லிணக்கத்தின் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.
அண்மையில், தீவிரவாதப் போக்கிற்கு மாறியது, வன்முறையை அல்லது சமூகத்தில் அமைதியின்மையைத் தூண்டும் விதத்தில் இணையத்தில் கருத்துகளைப் பதிவிட்டது தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் 23 வெளிநாட்டவர்கள் உள்பட 37 பேரை விசாரித்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்தது. 16 வெளிநாட்டவர்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தீவிரவாத, பயங்கரவாத அபாயங்களை எதிர்கொள்ள சமூகம் ஒன்றிணைவது அவசியம் எனக் கூறிய திருவாட்டி டியோ, அதற்கு மூன்று வழிகளை முன்வைத்தார்.
முதலாவதாக, மற்ற சமயங்கள், கலாசாரங்களை ஆழமாக அறிந்துகொள்ள சிங்கப்பூர் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றார் அவர்.
அடுத்ததாக, தீவிரவாதப் போக்கிற்கு மாறுவதைத் தடுக்கவும் அப்படி வழிதவறுவோரை சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கவும் முழுமையான அணுகுமுறை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
இறுதியாக, தீவிரவாதப் போக்கு அறிகுறிகளுக்கு எதிராக சிங்கப்பூர் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று திருவாட்டி டியோ வலியுறுத்தினார்.
குறிப்பிட்டதொரு சமயத்துடன் அல்லது இனக்குழுவுடன் மட்டும் தீவிரவாதப் போக்கைத் தொடர்பு படுத்தக்கூடாது என்ற அவர், அதற்குச் சான்றாக கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் துப்பாக்கிச்சூடு சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார்.