இரு நாடுகளுக்கும் இடையே உள்ள புரிந்துணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் சிங்கப்பூரும் சீனாவும் இணைந்து, நீதிமன்றத்திற்கு வந்த வர்த்தக வழக்குகள் தொடர்பான புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளன.
இரண்டு நாடுகளையும் சேர்ந்த அனைத்துலக வர்த்தக வழக்குகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. ஒரு நாட்டின் சட்டதிட்டங்களையும் சட்டதிட்டச் செயல்முறைகளையும் மற்றொரு நாடு அறிந்துகொள்வதில் கொண்டுள்ள கடப்பாட்டுக்கு ஒரு சின்னமாக இப்புத்தகம் விளங்குகிறது.
சிங்கப்பூரின் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், சீனாவின் தலைமை நீதிபதி ஸோ சியாங் ஆகியோர் காணொளி மாநாடாக நேற்று முன்தினம் நடந்த நான்காவது சிங்கப்பூர்-சீன சட்ட, நீதிமன்ற வட்டமேசை கூட்டத்தில் புத்தகத்தை வெளியிட்டனர்.
சிங்கப்பூர் மற்றும் சீனாவைச் சேர்ந்த தொகுப்பாளர்கள், நிபுணத்துவ வர்ணனையாளர்களைக் கொண்ட குழுவின் முயற்சியில் சீனாவின் சாலைத் திட்டம் தொடர்பான வழக்குகள் திரட்டப்பட்டதாக சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இரண்டு நாடுகளின் வர்த்தகச் சட்டதிட்டங்களில் காணப்படும் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் விதமாக, இப்புத்தகத்தைப் பொதுமக்களுக்கும் கிடைக்கச் செய்யும் திட்டம் உள்ளது.
மேலும் இந்நிகழ்வில் வெளிப்படையான, ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் இரண்டு தலைமை நீதிபதிகளும் ஈடுபட்டனர். தற்போதுள்ள இருதரப்புத் திட்டங்களை மேலும் வலுவாக்குவது, இருதரப்புக்கும் பயன்தரும் அம்சங்களில் ஒத்துழைப்பது குறித்தும் இருவரும் பேசினர்.
வட்டமேசைக் கூட்டம் 2017ஆம் ஆண்டுமுதல் வருடாந்திர நிகழ்வாக நடைபெற்று வருகிறது. ஆனால் இவ்வாண்டு முதல்முறையாக அது மெய்நிகர் மாநாடாக நடந்தது.