வரும் ஜூன் விடுமுறை, வெளிநாடுகளில் கோடைக்காலப் பயணகாலம் ஆகியவை விரைவில் தொடங்கும்போது, சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் வரவு இன்னும் வலுவாக மீட்சி அடையும்.
போக்குவரவு அமைச்சர் எஸ். ஈஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தற்போது கொவிட்-19 பரவலுக்கு முன்பு இருந்ததில் சராசரியாக 40 விழுக்காட்டில் உள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் கொவிட்-19க்கு முந்தைய நிலையில் பாதி அளவை எட்டும் இலக்கை சிங்கப்பூர் நெருங்கி வருகிறது.
ஜூன் மாதத்துக்குப் பின்னர் அரசாங்கம் அந்த இலக்கை மறுபரிசீலனை செய்யும் என்று திரு ஈஸ்வரன் கூறினார்.
இரண்டு நாளாக நடைபெரும் சாங்கி விமானத்துறை மாநாட்டில் அவர் புதன்கிழமை ( மே 18) அன்று உரையாற்றினார்.
கொவிட்-19 பரவலின்போது சாங்கி விமான நிலையம் அதன் ஊழியர் அணியில் மூன்றில் ஒரு பங்கை இழந்தது.
ஊழியர்களை மீண்டும் வேலையில் அமர்த்துவது, விமான நிலையத்தின் செயல் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது ஆகியவை சிறிய சவால்கள் இல்லை என்றார் திரு ஈஸ்வரன்.
சாங்கி உட்பட உலகில் உள்ள பல விமான நிலையங்கள் இந்தப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன.
மற்ற விமான நிலையங்களில் நீண்ட வரிசைகளில் பயணிகள் காத்திருப்பதையும் கடைசி நேரத்தில் விமானச் சேவைகள் ரத்தாவதையும் காண முடிகிறது.
சாங்கி விமான நிலையத்தில் பயண அனுபவம் குன்றாத வகையில், ஜூன் மாதத்தில் அதிகரிக்க உள்ள பயணிகள் வரவை சரியாகச் சமாளிப்பதே முதன்மை பணி என்று திரு ஈஸ்வரன் கூறினார்.
ஜூன் மாதத்துக்குப் பிறகு பயணிகள் எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் அடுத்த அலைக்குத் தயாராக இருக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், 6,600க்கும் அதிகமான ஊழியர்களை வேலைக்கு அமர்த்தப்போவதாக சாங்கி விமான நிலையக் குழுமம் அறிவித்துள்ளது.