சிங்கப்பூர், கத்தார் நிறுவனங்களுக்குக் கூடிய விரைவில் இரண்டு நாடுகளிலும் தொழில் தொடங்குவதற்கு மேலும் எளிமையாக இருக்கும். நீடித்து நிலைக்கத்தக்க தொழில்நுட்பங்கள், உணவுத் துறை, இணையப் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் அவை தொழில் செய்யலாம்.
கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள எமிரி திவான் அலுவலகத்தில் இரண்டு நாடுகளும் ஐந்து புரிந்துணர்வுக் குறிப்புகளில் கையெழுத்திட்டுள்ளன.
அதிபர் ஹலிமா யாக்கோப் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு கத்தார் சென்றபோது அந்த உடன்படிக்கைகள் கையெழுத்தாயின. திருவாட்டி ஹலிமாவின் தவணைக்காலத்தில் அவர் மேற்கொள்ளும் இறுதி வெளிநாட்டுப் பயணம் இது.
சிங்கப்பூர் கிட்டத்தட்ட 30 சிறிய, நடுத்தர தொழில்நிறுவனங்கள் அடங்கிய மூன்று பேராளர் குழுக்களை வரும் செப்டம்பர் மாதம் கத்தாருக்கு அனுப்பவிருக்கிறது.
நிதித் தொழில்நுட்பம், சுகாதாரப் பராமரிப்பு, எரிசக்தி, தளவாடத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் நாட்டில் உத்தேசச் சந்தை வாய்ப்புகள் பற்றியும் கூட்டு ஒத்துழைப்பு குறித்தும் ஆராயும் என்று வர்த்தக தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் கூறினார்.
இதற்கிடையே, சிங்கப்பூருக்கும் கத்தாருக்கும் ஒன்றுக்கு மற்றொன்றின்மீது இயற்கையாகவே நாட்டம் உள்ளதாகவும் அவை ஒரே மாதிரியான உத்திபூர்வ கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளதாகவும் அதிபர் ஹலிமா கூறியிருக்கிறார்.
“சிறிய நாடுகளான நம்மைச் சுற்றி நிலப்பரப்பிலும் மக்கள்தொகையிலும் நம்மைவிட மிகப் பெரிய அளவிலான அண்டை நாடுகள் உள்ளன. ஆயினும், அனைத்துலகச் சமூகத்தில் துடிப்பான, பொறுப்பான, ஆக்கபூர்வமான உறுப்பினர்களாக இருப்பதற்கும் காலத்திற்கேற்ப நம்மை முன்னிறுத்திக் கொள்வதற்கும் நாம் முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம்,” என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.
கத்தாரில் வசித்துவரும் கிட்டத்தட்ட 300 சிங்கப்பூரர்களில் 250க்கும் மேற்பட்டோர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரும் கத்தாரும் தொடர்ந்து தடையற்ற வர்த்தகத்தையும் அனைவரையும் உள்ளடக்கிய, விதிமுறைகளின் அடிப்படையிலான பலதரப்பட்ட வர்த்தக அமைப்புமுறையையும் தொடர்ந்து வலுவாக ஆதரிப்பதாய்த் திருவாட்டி ஹலிமா கூறினார்.
அண்மைய ஆண்டுகளில் கத்தார் கணிசமான உருமாற்றங்களைக் கண்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்திய முதல் மத்தியக் கிழக்கு வட்டார நாடு அதுதான். கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் வெற்றி, பிரம்மாண்டமான நிகழ்வு ஒன்றை நடத்தி, உலக அளவில் மிளிரக்கூடிய ஆற்றல் ஒரு சிறிய நாட்டிற்கு உண்டு என்பதை எடுத்துக்காட்டியதாக அவர் கூறினார்.
திருவாட்டி ஹலிமா 88,966 பேர் அமரக்கூடிய லுசைல் விளையாட்டரங்கிற்கும் சென்றிருந்தார்.