மனிதவள ஊழியர்கள் சான்றிதழ் பெற ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதி

மனிதவள ஊழியர்கள் சான்றிதழ் பெற ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதி

2 mins read
4f0b0b4c-951c-4cb7-a946-cc1923d80bcd
பாய லேபாரில் உள்ள வாழ்நாள் கற்றல் நிலையத்தில் முதலாவது ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் எஸ்எம்இ கருத்தரங்கு’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தங்களது தேர்ச்சித்திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் மனிதவள நிபுணர்கள் கழகத்திடமிருந்து (ஐஎச்ஆர்பி) தொழில்முறைச் சான்றிதழ் பெறவும் விரும்பும் மனிதவளத் துறை ஊழியர்கள், அதற்கான செலவுகளுக்கு தங்களது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதியைப் பயன்படுத்தலாம்.

இவ்வாண்டு இறுதிமுதல் அது சாத்தியமாகும்.

சிறிய, நடுத்தர நிறுவனங்களை (எஸ்எம்இ) இலக்காகக் கொண்டு, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் பங்காளிகள் மேற்கொண்டுள்ள பல புதிய தேர்ச்சித்திறன் திட்டங்களில் இதுவும் ஒன்று.

பாய லேபாரில் உள்ள வாழ்நாள் கற்றல் நிலையத்தில் முதலாவது ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் எஸ்எம்இ கருத்தரங்கு’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, மனிதவள, கல்வி துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங் இதனை அறிவித்தார்.

இப்போது மனிதவளத் துறையில் 7,000க்கும் மேற்பட்டோர் சான்றிதழ் பெற்றுள்ளனர். வரும் 2025ஆம் ஆண்டிற்குள் 12,000ஆக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த இலக்கை நோக்கி நடைபோட்டு வருவதாகக் கூறிய ‘ஐஎச்ஆர்பி’ தலைமை நிர்வாகி அஸ்லாம் சர்தார், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதியைப் பயன்படுத்தத் தகுதிபெறுவதன் மூலம் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் மனிதவளப் பிரிவு ஊழியர்கள் பலரும் சான்றிதழ் பெற முன்வருவர் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தச் சான்றிதழானது, தங்களது நிறுவனங்களில் படிப்படியாக மனிதவள நடைமுறைகளை அமல்படுத்தும் வகையில் மனிதவளப் பிரிவு ஊழியர்களை எதிர்காலத்திற்குத் தயார்ப்படுத்தும் என்று அமைச்சர் கான் குறிப்பிட்டார்.

இதனிடையே, பட்டயப் பொறியாளர்கள் (சார்ட்டர்டு எஞ்சினியர்) தனித்திறமை பெறும் வகையில் சிங்கப்பூர் பொறியாளர்கள் கழகம் (ஐஇஎஸ்) ஒரு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மைக் குறிக்கோள்களுக்கு இணங்க, அத்துறையில் அதிகரித்துவரும் தேவைகளுக்கு ஏற்ப பொறியாளர்களுக்குப் பயிற்சியளிக்க தாங்கள் உருவாக்கியுள்ள கட்டமைப்பு உதவும் என்று நம்புவதாக ‘ஐஇஎஸ்’ தலைவர் டால்சன் சுங் கூறினார்.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ஐஇஎஸ்’, ‘ஐஎச்ஆர்பி’ உட்பட ஐந்து அமைப்புகளைத் தேர்ச்சித்திறன் மேம்பாட்டுப் பங்காளிகளாக நியமித்தது.

சிங்கப்பூர் கணினிச் சங்கம், சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபை, எஸ்ஜிடெக் வணிகச் சங்கம் ஆகியவை மற்ற மூன்று அமைப்புகள்.

அவ்வப்போது அதிகத் தேவை இருக்கும் துறை சார்ந்த தேர்ச்சித்திறன்கள், பொருத்தமான தொழில்சார் தேர்ச்சித்திறன்களை ஊழியர்கள் கற்றுக்கொள்ளவும் சான்றிதழ் பெறவும் வழிமுறைகளை உருவாக்குதல் போன்றவை குறித்து அந்தப் பங்காளி அமைப்புகள், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குத் தெரிவிக்கும் என்று அமைச்சர் கான் தெரிவித்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிதியுதவியுடன் கூடிய பயிற்சித் திட்டங்களில் கிட்டத்தட்ட 9,500 சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பங்கெடுத்தன. அந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் ஏறத்தாழ 22,000ஆக உயர்ந்தது.

இதே காலகட்டத்தில், அப்பயிற்சிகளால் பயனடைந்த சிறிய, நடுத்தர நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 55,000லிருந்து 100,000ஐ எட்டியது.

குறிப்புச் சொற்கள்