சீனாவின் செங்டு நகரிலிருந்து பயணம் மேற்கொண்ட ஏர் சைனா பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிங்கப்பூரில் அவசரமாகத் தரையிறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. விமானத்தின் இடது புறத்தில் இருக்கும் இயந்திரம் தீப்பிடித்துக்கொண்டதால் இந்நிலை உருவானது.
காலை 11.05 மணிக்கு தியான்ஃபு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட CA403 விமானத்தின் சரக்கு வைக்கப்படும் பகுதியிலும் கழிவறையிலும் புகை மூண்டது. தியான்ஃபு விமான நிலையம் வெளியிட்டிருந்த ஃபேஸ்புக் பதிவில் இந்த விவரம் இடம்பெற்றது.
பிற்பகல் 4.15 மணியளவில் இந்த விமானம் சிங்கப்பூரின் மூன்றாவது விமான ஓடுபாதையில் (ரன்வே 3) தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதில் ஒன்பது பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
“அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏர் சைனாவும் சாங்கி விமான நிலையக் குழுமமும் அனைத்துப் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு உதவி வழங்கி வருகின்றன,” என்று அது மேலும் சொன்னது.
விமான இயந்திரத்தில் மூண்ட தீ அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் சாங்கி விமான நிலையத்தில் சில விமானச் சேவைகள் பாதிக்கப்படதாக அறிவிக்கப்பட்டது.
விமானத்தில் 146 பயணிகளும் ஒன்பது விமானப் பணியாளர்களும் இருந்தனர்.