தஞ்சோங் பகார் ரோட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது ஜப்பானிய-இத்தாலிய உணவகமான ‘ரிஸ்டோராண்டே லூகாஸ்’.
வெள்ளிக்கிழமை (அக். 20) மாலை அதன் சமையலறையில் தீ மூண்டதால் அப்போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் 30 பேருடன் ஊழியர்கள் 10 பேரும் உணவகத்திலிருந்து வெளியேறினர்.
தீச்சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை தொடர்கிறது.
தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்துக்குச் செல்வதற்கு முன்பாகவே 40 பேரும் உணவகத்திலிருந்து வெளியேறிவிட்டனர் என்று அதிகாரிகள் கூறினர்.
தீச்சம்பவத்தால் யாருக்கும் காயமில்லை. உணவகம் சில நாள்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.
வரும் புதன்கிழமை அது மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

