சில நோய்கள் அல்லது உடல் நலப் பிரச்சினைகள் உள்ள சில கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் சிக்கலாக அமையலாம்.
அத்தகையோர் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது கூடுதலாக கவனிக்கப்படவேண்டும்.
நீரிழிவு நோய், இதய நோய், பிரிஎக்கிளம்ப்சியா எனும் மோசமான ரத்த அழுத்தப் பிரச்சினை போன்றவவை இருக்கும் கர்ப்பிணிகள், வயதான கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். பிரசவத்தின்போது கர்ப்பிணி, பிறக்கும் குழந்தை அல்லது கர்ப்பப்பைக்கு ஆபத்து நேராமல் இருக்க இது அவசியம்.
அண்மை ஆண்டுகளில் இப்படி அபாயகரமான பிரசவத்தை எதிர்நோக்கும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மகப்பேறு வசதிகளைக் கொண்ட மூன்று பொது மருத்துவமனைகளும் இவ்வாறு கூறின. எனினும், இதை எடுத்துக்காட்டும் புள்ளி விவரங்கள் அவற்றிடம் இல்லை.
மகப்பேற்று வசதிகளைக் கொண்ட கிலெனீகல்ஸ், மவுன்ட் எலிசபெத், பார்க்வே ஈஸ்ட் உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளும் இதன் தொடர்பான புள்ளி விவரங்கள் தங்களிடம் இல்லை எனத் தெரிவித்தன.
எனினும், மகப்பேற்று வசதிகளைக் கொண்ட பொது மருத்துவமனைகளான கேகே மகளிர், சிறார் மருத்துவமனை, தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஆகியவை தங்களின் மருந்தகங்களுக்கும் மருத்துவ நிலையங்களுக்கும் வரும் அபாயகரமான பிரசவத்தை எதிர்நோக்கும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை கூடியிருப்பதாகக் கூறின.
2021ஆம் ஆண்டில் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சென்ற அத்தகைய கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 9,400ஆகப் பதிவானதாகவும் சென்ற ஆண்டு அந்த எண்ணிக்கை 9,900க்கு உயர்ந்ததாகவும் அதன் பேச்சாளர் ஒருவர் கூறினர்.
இவ்வாண்டின் எண்ணிக்கை சுமார் 10,400க்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2020லிருந்து 2022க்கு இடைப்பட்ட காலத்தில் கேகே மருத்துவமனைக்குச் சென்ற அபாயகரமான பிரசவத்தை எதிர்நோக்கும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பானது. சிங்கப்பூர் பொது மருத்துவமனையிலும் இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்தது.
பொதுவாக கர்ப்பமாகும் வயது கூடும்போதும் உடல் பருமன் பிரச்சினை அதிகரிக்கும்போதும் அபாயகரமான பிரசவத்தை எதிர்நோக்க நேரிடும் என்று மருத்துவர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.
சில பெண்கள், கர்ப்பமாக இருக்கும்போது நீரிழிவு நோய்க்கு ஆளாவர். அதுவும் இரண்டாம் வகை நீரிழிவு நோயும் கடந்த ஆண்டுகளாக அபாயகரமான பிரசவத்துக்கு முக்கியக் காரணங்களாக இருந்து வருகின்றன.
இவற்றோடு, பெண்கள் மன நலப் பிரச்சினைகளையும் கையாள வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையைக் கையாள மகப்பேறு மனநல ஆலோசனை (பிரிக்கொன்செப்ஷன் கெளன் சலிங்) போன்ற சேவைகளை நாடுமாறு பெண்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.