செந்தோசாவுக்கு அருகே மேற்கொள்ளப்படும் நீர் கேளிக்கை நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளன.
சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம், சமூகக் குழுக்கள் உள்ளிட்டவற்றுடன் இணைந்து மறுபரிசீலனை செய்யும்.
அக்டோபர் மாதம் செந்தோசாவுக்கு அருகே உள்ள புரான் சேனல் பகுதியில் 33 வயது மாது மாண்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. செந்தோசாவுக்கும் தெக்குக்கோர் தீவுகளுக்கும் நடுவே தனது படகு கவிழ்ந்ததால் மாது உயிரிழந்தார்.
கடலில் மிதக்கும் தடுப்புகளுக்கு அருகே இச்சம்பவம் நிகழ்ந்தது. மாதின் மரணம் பலரின் கவனத்தை ஈர்த்தது.
பல படகுகள் அப்பகுதியில் கவிழ்ந்திருப்பதும் அப்பகுதியில் மிதக்கும் தடுப்புகளால் ஏற்படும் அபாயமும் அதற்கான காரணங்கள்.
மிதக்கும் தடுப்புகள், பிறர் ஊடுருவுவதைத் தவிர்ப்பதில் பலனளித்துள்ளதாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையமும் காவல்துறையும் வியாழக்கிழமையன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு அவ்வாறு பதிலளிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில் சாங்கி கடற்பகுதிவழி படகு ஒன்று சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றதாகவும் மிதக்கும் தடுப்புகள் அதை மெதுவடையச் செய்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. அதன் மூலம் படகில் இருந்தவர்கள் தப்பியோடுவதற்கு முன்பு நிலைமையைக் கையாள காவல்துறைக்குப் போதுமான நேரம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.