ஆர்ச்சர்ட் ரோட்டில் கிறிஸ்துமசுக்கு முதல் நாள் (டிசம்பர் 24) மாலை நடைபெறும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வோரும் கடைசி நேரத்தில் பண்டிகைக்கான பொருள்களை வாங்க விரும்புவோரும் அங்கு செல்வதற்குமுன் கூட்ட நெரிசல் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள இயலும்.
அந்த வட்டாரத்தில் கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களையும் அவற்றுக்கு மாற்றாக அதிகக் கூட்டமில்லாத இடங்களையும் https://go.gov.sg/crowd-at-orchard-road எனும் இணைய வாசலில் உள்ள மின்னிலக்க வரைபடத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
டிசம்பர் 24ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து அந்த மின்னிலக்க வரைபடத்தைப் பயன்படுத்த முடியும்.
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ்துமசுக்கு முதல் நாள் மாலை ஆர்ச்சர்ட் ரோட்டில் கூட்ட நெரிசலைச் சமாளிக்க கூடுதலான காவல்துறை அதிகாரிகள், துணைக்காவல் படை அதிகாரிகள், பாதுகாவல் அதிகாரிகள் ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் சாலைத் தடுப்புகள் அங்கு அமைக்கப்பட்டிருக்கும். வழிகாட்டும் அறிவிப்புப் பலகைகளும் பொருத்தப்பட்டிருக்கும்.
பாதுகாவல் பிரிவினர், வருகையாளர்களின் பைகள், உடைமைகளைச் சோதனையிடக்கூடும். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்புக் கருதி அத்தகைய சோதனைகளுக்கு ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
ஆர்ச்சர்ட் பெருவிரைவு ரயில் நிலையத்தின் சில நுழைவாயில்களும் வெளியேறும் வழிகளும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மூடப்பட்டிருக்கும் என்று காவல்துறை தெரிவித்தது.
சாமர்செட் ரயில் நிலையத்தையோ இதர பொதுப் போக்குவரத்துச் சேவைகளையோ பயன்படுத்தும்படி பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
பண்டிகைக் கொண்டாட்டங்களை முன்னிட்டு போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆர்ச்சர்ட் ரோட்டிற்கும் ஸ்காட்ஸ் ரோடு, பைட்ஃபோர்ட் ரோடு ஆகியவற்றுக்கும் இடைப்பட்ட பகுதி டிசம்பர் 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
பாதிக்கப்பட்ட சாலைச் சந்திப்புகளில் வாகனமோட்டிகளுக்கு உதவவும் போக்குவரத்தைச் சமாளிக்கவும் துணைக்காவல் படை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருப்பர்.
சாலைகள் மூடப்படுவதால், பேருந்துச் சேவை எண்கள் 7,14, 16, 65, 111,123, 124 உட்பட சில பேருந்துகளின் சேவை டிசம்பர் 24 மாலை 6 மணி முதல் பாதிக்கப்படும். மேல்விவரங்களுக்கு எஸ்பிஎஸ் டிரான்சிட் இணையத்தளத்தை நாடலாம்.
மற்றவர் பாதுகாப்புக்குத் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளிலோ சினமூட்டும் நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக விளங்குவோர், சட்டத்தை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.