தைவானின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாய் சிங்-தேவுக்கு சிங்கப்பூர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.
இவ்வாண்டின் தைவான் பொதுத் தேர்தலில் திரு லாயின் ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சி சனிக்கிழமையன்று (ஜனவரி 13) வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து திரு லாய் அதிபராகப் பதவியேற்பது உறுதியானது.
“தைவானுடனும் தைவானிய மக்களுடனும் சிங்கப்பூர் நீண்டகாலம் நீடிக்கும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. எங்களின் ‘ஒரு சீனா’ கொள்கைக்கு ஏற்ப இந்த உறவைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்வோம்,” என்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) வெளியிடப்பட்ட அறிக்கையில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு சொன்னது.
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான உறவை அமைதியான முறையில் வளர்ப்பதற்கு சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.
“பேச்சுவார்த்தை, நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுதல், ஒத்துழைக்க முயற்சி செய்தல் ஆகியவை (தைவான்) நீரிணையில் இரு தரப்புக்கும் பலனளிக்கும்.
“அதுவே அந்த ஒட்டுமொத்த வட்டாரம் நிலைத்தன்மையுடன் இருக்கவும் செழிக்கவும் வழிவகுக்கும். அதை சிங்கப்பூரும் அனைத்துலக சமூகமும் வரவேற்கும்,” என்று வெளியுறவு அமைச்சு கூறியது.