ஃபெர்ன்வேல் லிங்க் வட்டாரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 26) தீ மூண்டதில் மூன்று மோட்டார்சைக்கிள்கள் அழிந்துபோயின.
பாதிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களில் ஒன்றின் மின்சாரப் பாகத்திலிருந்து தீ மூண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. யாரும் காயமடைந்ததாகத் தெரியவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஃபெர்ன்வேல் லிங்க்கில் உள்ள வீவக புளோக் 415Aயில் தீ மூண்டதாக வெள்ளிக்கிழமை இரவு 11.20 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் வந்தது. மூன்று மோட்டார்சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட தீ, தண்ணீர்த் தெளிப்பான்களால் அணைக்கப்பட்டது.
தீ எரிந்துகொண்டிருந்தபோது அதைக் காண குறைந்தது 50 பேர் அப்பகுதியில் திரண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சீன மொழி நாளிதழான சாவ்பாவிடம் தெரிவித்தார்.

