காசநோய் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட புக்கிட் மேரா கடை உரிமையாளர்கள், வணிகர்கள் $250 பண உதவியைப் பெறுவர்.
ஏபிசி பிரிக்வொர்க்ஸ் சந்தை, உணவு மையத்தில் உள்ள கடைகளுக்கும் ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள புளோக் 1, 2, 7 ஆகியவற்றில் செயல்படும் கடைகளுக்கும் ஒரு முறை மட்டும் வழங்கப்படும் மானியம் கிடைக்கும் என்று அந்த பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் சுவா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) சேனல் நியூஸ் ஏஷியாவிடம் தெரிவித்தார்.
மோசமான வர்த்தக நிலைமைகளைக் கருத்தில் கொண்டு குவீன்ஸ்டவுன் குடிமக்கள் ஆலோசனைக் குழு, மத்திய சிங்கபபூர் சமூக மேம்பாட்டு மன்றம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக திரு சுவா கூறினார்.
வாடகை, பயனீட்டுக் கட்டணக் கழிவு குறித்தும் அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும், இவை குறித்த விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் திரு சுவா கூறினார்.
ஜனவரி முற்பகுதியில் அப்பகுதியில் காசநோய் சம்பவங்கள் பற்றிய செய்தி வெளிவந்த பிறகு விற்பனை சரிந்ததாக ஏபிசி பிரிக்வொர்க்ஸில் உள்ள வணிகர்கள் முன்னர் தெரிவித்தனர்.
சில வாரங்களுக்குப் பிறகு, வணிகம் மேம்பட்டுள்ளது என்றாலும் சில வாடிக்கையாளர்கள் இன்னமும் அப்பகுதியைத் தவிர்ப்பதாக வணிகர்கள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் காசநோய்க்கான கட்டாயம் பரிசோதனை ஜனவரி 11 அன்று தொடங்கியது. 2,548 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் இரு காசநோய் சம்பவங்கள் கண்டறியப்பட்டன. மேலும் 322 பேருக்கு அறிகுறியில்லாத காசநோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, 66 பேருக்கு கூடுதல் சோதனைக்குச் செல்லவேண்டியிருந்தது.
அறிகுறியில்லாத காசநோய் தொற்று உள்ளவர்கள் இந்த நோயைப் பரப்ப முடியாது, முன்கூட்டியே சிகிச்சை அளித்தால் காசநோய் குணப்படுத்தக்கூடியது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.