உலக நாடுகள் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் பக்கம் நிற்கவேண்டுமென சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் கேட்டுக்கொண்டுள்ளார்.
காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே நடக்கும் போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 30,000ஐ எட்டியுள்ள நிலையில், உலக நாடுகள் கடைப்பிடிக்கும் அறக்கொள்கை குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஸாவில் போர்நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் நிலவும் குழப்பத்தைத் தமது ஃபேஸ்புக் பதிவில் சுட்டிய திருவாட்டி ஹலிமா, அனைத்துலகச் சட்டங்களும் அமைப்புகளும் பொருத்தமற்றதாகிவிட்டன என்றார்.
“இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட பயங்கரங்களுக்குப் பிறகு, போர்ச்சூழலில் அப்பாவி மக்களைப் பாதுகாப்பது தொடர்பில் காணப்பட்ட இணக்கம் தற்போது மிகவும் வலுவிழந்துவிட்டது. உலகம் தற்போது மாறிவிட்டது,”என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திருவாட்டி ஹலிமாவின் இந்த ஃபேஸ்புக் பதிவை, சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன், “முன்னாள் அதிபர் ஹலிமா ஆணித்தரமாக முன்வைத்துள்ள கருத்துடன் உடன்படுகிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.