போட் கீ வட்டாரத்தில் வெளிநாட்டுப் பெண்கள் சிலர் சட்டவிரோதமாக வேலை செய்வதாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூரில் கேளிக்கை கூடங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போதும் இந்நிலை உருவாகியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா, உக்ரேன், ஜார்ஜியா, பெலருஸ் போன்றவற்றைச் சேர்ந்த பெண்கள் சர்க்கியுலர் ரோட்டில் உள்ள மதுபான கேளிக்கைக் கூடத்துக்கு வெளியே செயல்பட்டுக்கொண்டிருப்பது காணப்பட்டது. $100 விலையில் தங்களுக்கு மதுபானம் வாங்கித் தருமாறு அவர்கள் ஆண்களிடம் கேட்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வேளைகளில் அப்பெண்கள் கட்டணம் பெற்று பாலியல் சேவைகளை வழங்குவதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
2022, 2023ஆம் ஆண்டுகளில் அந்த வட்டாரத்தில் உள்ள கேளிக்கைக் கூடங்களில் காவல்துறையினர் பாலியல் சேவை முறியடிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதியிலிருந்து டிசம்பர் மாதம் 18ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் போட் கீ மட்டுமின்றி லிட்டில் இந்தியா, கேலாங், சைனாடவுன் போன்ற பகுதிகளில் இருக்கும் கேளிக்கைக் கூடங்களில் பாலியல் சேவை முறியடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 6,700 பேர் சோதனையிடப்பட்டனர், அவர்களில் 523 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கைதானோரில் பாலியல் சேவைகளை வழங்கிய பெண்களும் அடங்குவர்.
போட் கீயில் சட்டவிரோதமாக வேலை செய்யும் சில பெண்கள் சுற்றுப்பயணிகளுக்கான விசாவில் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் வேலை பார்ப்பதற்கான தகுந்த உரிமம் இல்லாதோரை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 30,000 வெள்ளி அபராதமும் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
இரவுநேர கேளிக்கைக் கூடங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவது வழக்கமாகிடக்கூடாது என்று சிங்கப்பூர் இரவுநேர வர்த்த நிர்வாக அமைப்பின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். அதேவேளை, அந்த அமைப்பு எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில்கொள்வதாகவும் அவர் கூறினார்.
“விதிமுறைகளை மீற நினைப்போர் அதற்கென ஏதாவது வழிகளைக் கண்டுபிடிப்பர். வர்த்தகர்களிடையே விழிப்புணர்வை வளர்த்து நல்ல நடைமுறைகளை அவர்களுக்குப் புரிய வைப்பதே நம்மால் முடிந்ததாகும்,” என்றார் அவர்.