இந்த ஆண்டுக்கான சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்த முன்னுரைப்பை 2.3 விழுக்காட்டிலிருந்து 2.4 விழுக்காடாக தனியார் துறை பொருளியல் வல்லுநர்கள் உயர்த்தியுள்ளனர்.
சிங்கப்பூர் நாணய ஆணையம் மார்ச் 13ல் வெளியிட்ட தொழில்முறை முன்னுரைப்பு குறித்த காலாண்டு ஆய்வில் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
உலகளாவிய தேவை அதிகரிப்பு, மின்னியல் துறையின் மீட்சி, சீனாவின் வலுவான வளர்ச்சி ஆகியவற்றினால் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகமாக இருக்கும் அவர்கள் கருதுகின்றனர்.
வர்த்தக, தொழில் அமைச்சின் அண்மைய கணிப்பின்படி 2023ஆம் ஆண்டில் பொருளியல் 1.1 விழுக்காடு வளர்ச்சி காணும். 2022ஆம் ஆண்டிய் முழு ஆண்டு வளர்ச்சியான 3.8 விழுக்காட்டுடன் ஒப்பிட இது குறைவு.
நாணய ஆணையத்தின் ஆய்வில் பங்கேற்றவர்கள் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆண்டு அடிப்படையில் பொருளியல் 2.6 விழுக்காடு வளரும் என்று கணித்துள்ளனர்.
பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் பங்கேற்ற 23 பொருளியல் நிபுணர்களில் எழுபத்தொரு விழுக்காட்டினர், 2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய வளர்ச்சி எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மாறாக, பெரும்பாலான முன்னுரைப்புகள் எதிர்பார்த்ததைவிட மெதுவான வெளிநாட்டு வளர்ச்சியையும் அதிகமான உலகளாவிய அரசியல் பதற்றங்களையும் அதனால் ஏற்படக்கூடிய பொருளியல் பாதிப்பு ஆபத்துகளையும் சுட்டியுள்ளன.
அண்மைய ஆய்வில் பங்கேற்ற வல்லுநர்களும் பணவீக்க அழுத்தங்கள், சீனாவின் வளர்ச்சி குறித்த ஏமாற்றம் ஆகியவை குறித்து எச்சரித்துள்ளனர்.
வர்த்தகம் தொடர்பான துறைகள் மெதுவாக மேம்பட்டு வருவதால், பொருளியல் 2024 ல் 1 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை வளரும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு கணித்துள்ளது.
எப்படி இருந்தாலும் அதிக வட்டி விகிதங்கள்,எதிர்பார்க்கப்பட்டதைவிட மெதுவான சீன பொருளியல் வளர்ச்சி ஆகியவை ஒட்டுமொத்த உலகளாவிய வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்றும் ஆணையம் கோடிகாட்டியுள்ளது.
டிபிஎஸ் வங்கியின் பொருளியல் நிபுணர் சுவா ஹான் டெங், சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023ஆம் ஆண்டின்1.1 விழுக்காட்டிலிருந்து 2024ஆம் ஆண்டில் 2.2 விழுக்காடாக உயரும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
எனினும், உற்பத்தி, மொத்த வர்த்தகம், நிதிச் சேவைகள் ஆகியவற்றில் வெளிப்புறம் சார்ந்த துறைகளின் மேம்பட்ட வளர்ச்சியின் அடிப்படையில் அவர் கணித்துள்ளார். பயணத்துறை தொடர்பான சேவைகளும் இதில் உதவும் என்று அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு ஜிடிபி 2.5 விழுக்காடு விரிவடையும் என்று ஆய்வில் பங்கேற்றவர்கள் 2025க்கான முதல் முன்னுரைப்பை கணித்துள்ளனர்.
தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகளைத் தவிர்த்து அனைத்துப் பொருள்களுக்குமான செலவுகளும் மூலாதாரப் பணவீக்கமும் 2024ஆம் ஆண்டில் குறையும் என்று பெரும்பாலானவர்கள் முன்னுரைத்துள்ளனர்.
அனைத்துப் பொருள்களுக்குமான மொத்தப் பணவீக்கம் ஆண்டு முழுமைக்கும் 3.1 விழுக்காடு என கணிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் கணக்கெடுப்பின் 3.4 விழுக்காட்டிலிருந்து குறைந்துள்ளது.
மூலாதாரப் பணவீக்கத்திற்கான சராசரி முன்னுரைப்பு முன்னைய கணிப்பில் இருந்து மாற்றமின்றி 3 விழுக்காடாகவே உள்ளது.
மொத்த மற்றும் மூலாதாரப் பணவீக்கம் இரண்டும் 2024ஆம் ஆண்டில் 2.5 விழுக்காடு முதல் 3.5 விழுக்காடு வரை சராசரியாக இருக்க வாய்ப்புள்ளது என்று ஆணையம் கணித்துள்ளது.
வேலையின்மை விகிதம் முந்தைய கணக்கெடுப்பிலிருந்து மாற்றமின்றி ஆண்டின் இறுதியில் 2.1 விழுக்காடாக இருக்கும் என ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
மனிதவள அமைச்சின் தரவுகள் 2023ல் ஒட்டுமொத்த வேலையின்மை சராசரியாக 1.9 விழுக்காடாகவும், குடியிருப்பாளர் வேலையின்மை விகிதம் 2.7 விழுக்காடாகவும் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.