புற்றுநோயாளியான ஆடவரைக் கிட்டத்தட்ட $24,000 ஏமாற்றியதாகக் கூறப்படும் ஓங் மே லிங் எனும் 62 வயது மாதிற்கு ஈராண்டுக்கு நிபந்தனையுடன்கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்த தொகையை முழுவதுமாகத் திருப்பித் தந்ததையடுத்து அந்த மாது விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆடவரை 2020ஆண்டு ஏமாற்றியது தொடர்பில் கடந்த அக்டோபரில் திருவாட்டி ஓங் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பிப்ரவரி 15ஆம் தேதி, ஏமாற்றிய தொகையைத் திருப்பித் தந்ததையடுத்து திருவாட்டி ஓங்கிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பின்னர் இவ்வழக்கின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் திருவாட்டி ஓங்கிற்கு ‘டிஎன்ஏடிஏ’ எனப்படும் தற்காலிக விடுதலைக்கு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 29ஆம் தேதி அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பில் உரிய ஆதாரங்கள் பின்னாளில் கிடைத்தால் திருவாட்டி ஓங் மீது மீண்டும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் மேல்விவரங்களை வெளியிடவில்லை.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆடவரின் உடல் நிலையை மேம்படுத்த உதவும் ஊசிகளையும் இதர பொருள்களையும் தன்னால் வாங்க முடியும் என்று கூறி திருவாட்டி ஓங் மோசடி செய்ததாகக் கூறப்பட்டது.
மோசடிக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.