கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூரில் சிறுநீரகச் செயலிழப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 40 விழுக்காடு கூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆண்களுக்கும் மலாய் இனத்தவருக்கும் இப்பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது. 2022ஆம் ஆண்டு முதல் ரத்தச் சுத்திகரிப்பு மேற்கொண்ட நோயாளிகள் ஐவரில் மூவர் ஆண்கள்.
மேலும், பொதுவாக சிறுநீரகச் செயலிழப்புக்கு ஆளான மலாய் இனத்தவரின் எண்ணிக்கை அப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சீனர்களின் எண்ணிக்கையில் மும்மடங்காகும்.
2022ல் ஒவ்வோர் ஒரு மில்லியன் மலாய் இனத்தவரில் 459 பேருக்கு ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை தேவைப்பட்டது; சீனர்களில் அந்த எண்ணிக்கை 150ஆகவும் இந்தியர்களில் 183ஆகவும் பதிவாயின. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இத்தகவல்களை வெளியிட்டது.
ஐந்தாம் கட்ட நாட்பட்ட சிறுநீரக அழற்சி (சிகேடி5) என்றும் அழைக்கப்படும் இப்பிரச்சினை சிறுநீரகம் அதன் செயலாற்றலை இழக்கும்போது எழுகிறது. அதனால் கழிவுகளும் நீரும் உடலில் சேரும்.
சிறுநீரக அழற்சி சிங்கப்பூர் எதிர்நோக்கும் மிகப் பெரிய பிரச்சினை ஆகும்.
உலகளவில் 10ல் ஒருவர் சிறுநீரக அழற்சிக்கு ஆளாகின்றனர். சிங்கப்பூரில் அந்த எண்ணிக்கை அதைவிட அதிகம்.
2022ல் நடத்தப்பட்ட தேசிய மக்கள்தொகை சுகாதாரக் கருத்தாய்வில் சிங்கப்பூரில் 14 விழுக்காட்டு மக்களுக்கு சிறுநீரக அழற்சி ஏற்பட்டது தெரிய வந்தது. அதற்கு ஈராண்டுகளுக்கு முன்பு அந்த விகிதம் ஒன்பது விழுக்காடாக இருந்தது.
2035ஆம் ஆண்டுக்குள் நால்வரில் ஒருவருக்கு சிறுநீரக அழற்சி ஏற்படும் என்று தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த வல்லுநர்கள் கணித்துள்ளனர். ‘அனைத்துலகச் சிறுநீரகவியல் சஞ்சிகை’ எனும் மருத்துவ சஞ்சிகையில் 2018ஆம் ஆண்டு வெளியான கட்டுரையில் அவர்களின் கணிப்பு வெளியிடப்பட்டது.
தைவான், அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக சிங்கப்பூரில்தான் சிறுநீரக செயலிழப்புப் பிரச்சினை ஆக மோசமாக இருக்கிறதென்று அமெரிக்கச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
இப்பிரச்சினைக்கு ஆளாகும் நோயாளிகளின் சிறுநீரகத்தைக் கூடுதல் காலம் இயங்கச் செய்ய புதிய மருந்துகள் இப்போது இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ரத்தச் சுத்திகரிப்பு சிகச்சையைத் தள்னிப்போட முடியும்.