ஆசியாவில் பருவநிலை மாற்றச் சவால்களைச் சமாளிக்க உதவுவதில் நிதித்துறை முக்கியப் பங்கு வகிப்பதாகத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியிருக்கிறார்.
இருப்பினும் நிதித்துறையினர், நீடித்த நிலைத்தன்மை தொடர்பான திறன்களை மேம்படுத்திக்கொள்வதும் பருவநிலை மாற்றம் தொடர்பில் மற்ற துறையினருடன் இணைந்து மேம்பட்ட முறையில் பணியாற்றுவதும் அவசியம் என்றார் அவர்.
இவ்வாறு பணியாற்றுவது, கரிம வெளியேற்றத்தில் ஆசியா ‘நெட் ஸீரோ’ எனப்படும் சமநிலையை எட்டுவதற்கு உதவும் என்று திரு ஹெங் கூறினார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் நீடித்த நிலைத்தன்மை, பசுமை நிதிக் கழகம், மார்ச் 21ஆம் தேதி ஏற்பாடு செய்த நீடித்த நிலைத்தன்மை நிதிக் கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.
மனிதர்களின் நடவடிக்கைகளால் வெளியேறும் கரிமத்தின் அளவும் இயற்கை நிகழ்வுகள் மூலம் காற்றுமண்டலத்திலிருந்து அகற்றப்படும் கரிமத்தின் அளவும் சமமாக இருக்கும் நிலை ‘நெட் ஸீரோ’ எனப்படுகிறது.
வனப்பகுதிகளை மீட்டெடுத்தல், படிம எரிபொருளுக்குப் பதிலாக புதுப்பிக்கப்படும் எரிசக்திக்கு மாறிக்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் அந்த நிலையை எட்ட உதவும்.
பருவநிலை மாற்றச் சவால்களுக்குத் தீர்வுகாண்பதில் அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள், நிபுணத்துவம், புத்தாக்கம் ஆகியவை முக்கியமான அம்சங்கள் என்று கூறிய துணைப் பிரதமர், சிங்கப்பூர் இதன் தொடர்பில் பங்களிக்க முடியும் என்றார்.