பொழுதுபோக்கு, வணிக நோக்கங்களுக்காக வரும் சீனப் பயணிகளுக்கு சிங்கப்பூர் ஒரு ‘கவர்ச்சிகரமான இடமாக’ உள்ளது என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் மார்ச் 22 வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரிலுள்ள சீன தூதரகம் மார்ச் 18ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், சூதாட்டத்திலிருந்து தள்ளியிருக்குமாறு அதன் குடிமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. எல்லை தாண்டிய சூதாட்டம் சீனாவின் சட்டங்களை மீறுவதாகும் என்றும், கடத்தல், பண மோசடி போன்ற பிற குற்றங்களுடன் தொடர்புடையாதாக இருக்கலாம் என்றும் அது குறிப்பிட்டது.
அது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு பதில் அளித்த பயணத்துறைக் கழகம் மேற்குறிப்பிட்டவாறு கூறியது.
தூதரகத்தின் அறிக்கையை கழகம் அறிந்திருப்பதாகவும், அதன் அக்கறைகளை மதிப்பதாகவும் பயணத்துறைக் கழகத்தின் சீனப் பெருநிலத்துக்கான நிர்வாக இயக்குனர் ஆண்ட்ரூ புவா கூறினார்.
பொழுதுபோக்கு, வணிகம் ஆகிய இரண்டிற்கும் சிங்கப்பூர் ஒரு நம்பிக்கையான, துடிப்பான இடமாகும், மேலும் சீனப் பயணிகள் பல காரணங்களுக்காக சிங்கப்பூருக்கு வருகை தருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
“குடும்ப செயல்பாடுகளுக்கு ஆதரவான இடம் என்ற பெயருடன், இருமொழிப் புழக்கம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் சிங்கப்பூர் பெயர் பெற்றது. சிங்கப்பூரின் பல்வேறுபட்ட சுற்றுலாத் தலங்களும் நிகழ்ச்சிகளும் சீனப் பயணிகளுக்கு சிங்கப்பூரை கவர்ச்சிகரமான இடமாகத் ஆக்குகின்றன,” என்றார் திரு புவா.