இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்து வேலைசெய்யும் பிச்சையா முத்துப்பாண்டி, 2022ஆம் ஆண்டு தனது 30ஆம் வயதில் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
பெற்றோர் அவருக்கு மணமகளை நிச்சயித்திருந்தனர். ஆனால் இல்லறத்தில் அடியெடுத்து வைக்கவேண்டிய அவர், காலைக் காப்பாற்றிக்கொள்ள அந்த ஆண்டு முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தது.
2022 ஆகஸ்ட் 8ஆம் தேதி, தனது சக ஊழியருடன் சேர்ந்து தொழிற்சாலைகளில் இயங்கும் மின்விசிறி ஒன்றைச் சோதித்தார் அவர்.
ஒரு மீட்டர் நீளமுள்ள எட்டு இறக்கைகளைக் கொண்ட அந்த ராட்சத மின்விசிறி கிட்டத்தட்ட 250 கிலோ எடைகொண்டது.
சரியாகப் பொருத்தப்படாததால் கழன்று விழுந்த மின்விசிறி, சில மீட்டர் தொலைவில் நின்றிருந்த முத்துப்பாண்டியின் வலது காலைப் பதம் பார்த்தது. அதில் அவரது கால் கிட்டத்தட்ட சிதைந்தது.
சிதைந்த தொடை எலும்பையும் காலையும் சீராக்க அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது அவரது வலது கால், இடது காலைவிட 3 முதல் 5 செ.மீ. நீளம் குறைந்துவிட்டது. அதைச் சமமாக்க, சிறப்புக் காலணிகளைப் பயன்படுத்துகிறார். ஊன்றுகோல் இல்லாமல் மெதுவாக நடக்கவும் தொடங்கிவிட்டார்.
ஆனால், பதவி உயர்வு, மண வாழ்க்கை என்ற கனவுகள் சிதைந்துவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் முத்துப்பாண்டி குறிப்பிட்டார்.
10 மாதங்கள் மருத்துவமனைக்கு அடிக்கடி செல்ல நேரிட்டது. 14 மாதங்கள் அவர் வேலைக்குச் செல்ல இயலவில்லை. உளவியல் ஆலோசனை, ‘பிசியோதெரபி’ எனப்படும் உடல் இயன் மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுக்கு அவர் சென்றார்.
அதிர்ஷ்டவசமாக, சம்பளம் தந்ததுடன் மருத்துவச் செலவுகளையும் அவர் வேலைபார்த்த நிறுவனம் ஏற்றுக்கொண்டது. 2023ல் அறிக்கை தயாரிக்கும் வேலையில் மீண்டும் சேர்த்துக்கொண்டது.
இவரையும் சேர்த்து 2022ஆம் ஆண்டில் வேலையிடத்தில் 614 ஊழியர்கள் மோசமாகக் காயமடைந்தனர். 2023ல் அந்த எண்ணிக்கை 590ஆகக் குறைந்தது.
இருப்பினும் ஒவ்வொரு மோசமான விபத்தும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார் முத்துப்பாண்டி.