சிங்கப்பூரில் நோன்புப் பெருநாளன்று காலையில் தொழுகை இடம்பெற ஏற்பாடு செய்யும் 68 பள்ளிவாசல்களில் மூன்றில் இரண்டில், ஒரு தொழுகை அமர்வுக்கு மேல் ஏற்பாடு செய்யப்படும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 4) தெரிவித்தது.
அந்த 68 பள்ளிவாசல்களில் 19ல் ஒரு தொழுகை அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்படும்; 41ல் இரண்டு தொழுகை அமர்வுகள் இடம்பெறும்; எட்டில் மூன்று அமர்வுகள் நடைபெறும்.
காலை 7.20 மணி, 8.45 மணி, 9.45 மணிக்குத் தொழுகை அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாண்டின் நோன்புப் பெருநாள் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
மேலும், தங்களின் வீடுகளுக்கு அருகே தொழுகையில் ஈடுபட விரும்பும் முஸ்லிம்களுக்கு உதவ 34 சமூகக் குழுக்கள் (குவார்யா) அமைத்துத் தரப்படும்.
மொத்தமாக 228,760 பேர் வரை தொழுகையில் ஈடுபட 68 பள்ளிவாசல்கள் வசதி செய்துதரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முயிஸ் குறிப்பிட்டது.