வசதி குறைந்தோரைத் தூக்கிவிட நிதி வளங்களைப் பகிர்ந்துகொண்டால் மட்டும் போதாது, தொடர்புகள், வாய்ப்புகள் ஆகியவற்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
அவ்வாறே சிங்கப்பூரின் திறன்தகுதி அணுகுமுறையைத் தொடர்ந்து பின்பற்றமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அப்போதுதான் அந்த அணுகுமுறையின் காரணமாக வெற்றியடைந்தோர் பிறருக்கும் உதவிக்கரம் நீட்டுவர் என்று திரு சான் சொன்னார்.
“சிங்கப்பூருக்கான குணாதிசயங்களைக் கொண்ட இப்படிப்பட்ட திறன்தகுதி முறையைத்தான் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்,” என்றார் அமைச்சர் சான். வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 5) டிபிஎஸ் குழுமத்தின் தலைவர் பியுஷ் குப்தாவுடன் சமூக முன்னேற்றத்தைப் (சோஷியல் மொபிலிட்டி) பற்றிப் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
‘ஆக்செஸ் சோஷியல் மொபிலிட்டி’ எனும் மாநாட்டில் சுமார் 450 பங்கேற்பாளர்களிடம் திரு சான் பேசினார். ‘ஆக்செஸ் சிங்கப்பூர்’ அமைப்பின் ஐந்தாம் ஆண்டு நிறைவை அனுசரிக்க மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சமூக முன்னேற்ற நன்கொடை அமைப்பான ‘ஆக்செஸ் சிங்கப்பூர்’ 2019ஆம் அண்டு தொடங்கப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு வேலை தொடர்பான வாய்ப்புகளை வழங்குவது அதன் இலக்காகும்.
மாநாட்டில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. சிங்கப்பூரில் சமூக முன்னேற்றத்தை உறுதிசெய்வதற்கான வாய்ப்புகளையும் அதிலுள்ள சவால்களையும் அந்தக் கலந்துரையாடல்கள் ஆராய்ந்தன.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் சமூகத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக திரு சான் குறிப்பிட்டார். அதற்கு சிங்கப்பூரின் கல்வி முறையை அவர் உதாரணமாக எடுத்துக்காட்டினார்.
சிங்கப்பூரின் கல்வி முறையின்படி கீழ்நிலையில் உள்ள 25 விழுக்காட்டு மாணவர்களின் தேர்ச்சி, பொருளியல் ஒத்துழைப்பு, வளர்ச்சி அமைப்பில் கூறப்பட்டுள்ள சராசரி வளர்ச்சியைவிட அதிகம் என்று அமைச்சர் விளக்கினார்.

