எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டையும் இந்திய கலாசாரத் திருவிழாவையும் சிறப்பாகக் கொண்டாட ‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இந்திய சமூகத்தினரை உள்ளடக்கி தமிழ் புத்தாண்டையும் இந்திய புத்தாண்டையும் கொண்டாட ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் முழுவதும் பல நிகழ்ச்சிகளை லிஷா ஏற்பாடு செய்து வருகிறது.
இந்திய கலாசாரத் திருவிழா முதன்முதலில் 2010ஆம் ஆண்டில் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் திரு லீ குவான் யூவினால் தொடங்கிவைக்கப்பட்டு இன்றுவரை ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய சமூகங்கள் தங்களுடைய தனித்துவமான கலாசாரத்தைக் காட்சிப்படுத்த ஒரு மேடையை அமைத்துக் கொடுத்துள்ளதைப் பெருமையாகக் கருதுவதாக லிஷா கூறியது.
இந்த ஆண்டு புதிய முயற்சியாக 60 உள்ளூர் கவிஞர்களின் பதாகைகள் சிராங்கூன் சாலை முழுவதும் லிஷாவால் வைக்கப்பட்டுள்ளன. இது ஏப்ரல் மாதம் இறுதிவரை சிராங்கூன் சாலையை அலங்கரிக்கும்.
முதல்முறையாக சித்திரை விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டுத் தலைவராக நியமிக்கப்பட்ட திரு பழனியப்பன் ராமநாதன், இந்த முயற்சியில் மூன்று மாதங்களாக ஈடுபட்டிருந்ததாகக் கூறினார்.
இந்திய கலாசாரத் திருவிழா எதிர்வரும் ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 7 மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இதைத் தொடர்ந்து 17 இந்திய சமூகத்தினரைப் பிரதிநிதித்து நடன நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து தமிழ் புத்தாண்டைக் கொண்டாட ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 7 மணி முதல் 10 மணி வரை சித்திரை கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற இந்திய சொற்பொழிவாளர் இசைக்கவி திரு ரமணன், தமிழ் திரைப்பாடல்களின்வழி தமிழ் இலக்கியம் பற்றிய சொற்பொழிவு ஆற்றவுள்ளார்.
அதைத் தொடர்ந்து ஆடல் பாடல் என்று மூன்று மணி நேரத்திற்குப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். 60 உள்நாட்டு கவிஞர்களைச் சிறப்பித்துப் பாராட்டுவதற்காக அவர்கள் எழுதிய கவிதைகளை லிஷா ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிடவுள்ளது.
இரண்டு நிகழ்ச்சிகளும் போலி@கிளைவ் ஸ்திரீட்டில் அமைந்திருக்கும் திறந்தவெளியில் நடைபெறவுள்ளன.
தமிழ்மொழிக்காக அரிய தொண்டாற்றிய முனைவர் சுப.திண்ணப்பனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
ஏப்ரல் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் தமிழ் மற்றும் இந்திய புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ‘விடியல் யோகா’, புதையல் வேட்டை, இசைக் கவி திரு ரமணனின் மாணவர்களுக்கான ஊக்க உரை, உள்ளூர் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு நிகழ்ச்சி, பாட்டு மன்றம் போன்ற புதுமையான, ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகளையும் மக்கள் எதிர்பார்க்கலாம்.
மேல் விவரங்களுக்கு https://iny.sg என்ற இணையத்தளத்தை நாடலாம்.