காஸாவில் போரால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவ புனித ரமலான் நோன்புக் காலத்தில் நன்கொடை திரட்ட சிங்கப்பூர் அறநிறுவனம் ஒன்று முயற்சிகளை மேற்கொண்டது.
அந்த முயற்சியின் பலனாக கிட்டத்தட்ட $2மில்லியன் நிதி திரட்டப்பட்டது. இதன்மூலம், காஸாவின் துயர் துடைக்க திரட்டப்பட்ட மொத்த நிதியின் மதிப்பு $10 மில்லியனாக அதிகரித்துள்ளது.
ரமலான் மாதத்தில் திரட்டப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட $40,000 சிங்கப்பூரில் இருக்கும் பள்ளிவாசல்களில் அமைக்கப்பட்டிருந்த நன்கொடைப் பெட்டிகளில் இருந்து சேகரிக்கப்பட்டவை.
2023 அக்டோபரில் நிதி திரட்டல் தொடங்கப்பட்டதில் இருந்து சேகரிக்கப்பட்ட $10 மில்லியன் என்பது ரஹ்மதன் லில் ஆலமின் (அனைவருக்கும் ஆசீர்வாதம்) அறக்கட்டளையால் திரட்டப்பட்ட அதிகபட்சமாகும்.
காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ரஹ்மான் லில் ஆலமின் அறநிறுவனத்தால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிதி திரட்டும் அறப்பணி ஏழு மாதத்தில் $10 மில்லியன் நிதி திரட்டி சாதித்துள்ளது.
இவ்வாண்டு மார்ச் மாதம் இந்த நிதியிலிருந்து $8மில்லியன் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
அனைத்துலக சமூகம் காஸா மக்கள்மீது அக்கறை கொண்டுள்ளன என்பதை உறுதிசெய்ய இதுபோன்ற உதவிகள் தொடர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் என சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃபிலி தெரிவித்தார்.
‘உமர் கம்போங் மலாக்கா’ பள்ளிவாசலில் ஏப்ரல் 10ஆம் தேதி நடந்த ரமலான் தொழுகையில் பங்கேற்ற பிறகு ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

