சிங்கப்பூரில் ஏப்ரல் மாத பிற்பாதியில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தீவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்துக்கு அதிகமான அளவில் மழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தீவின் சில பகுதிகளில் பெரும்பாலான நாள்களின் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 16) தெரிவித்தது. இந்தக் காலகட்டத்தில் உலகின் நிலநடுக்கோட்டுப் பகுதி மழைக்காலத்தை எதிர்நோக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது அதற்குக் காரணம்.
அதனால் சில நாள்கள் பல இடங்களில் கனமழை பொழியக்கூடும்.
எனினும், அநேகமாக வெப்பமும் தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 25லிருந்து 34 டிகிரி செல்சியசுக்குள் இடைப்பட்டிருக்கும். சில நாள்கள் பிற்பகல் வேளையில் வெப்பநிலை 35 டிகிரியைத் தொடக்கூடும்.
இம்மாதம் ஆறாம் தேதியன்று ஜூரோங் வட்டாரத்தில் வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியசைத் தொட்டது. கடந்த இரண்டு வாரங்களில் சிங்கப்பூரில் அதுவே ஆக அதிகமாகப் பதிவான வெப்பநிலையாகும்.