அண்மைக் காலமாக பெரும்பாலான இளையர்கள் ‘டெக் நெக் சிண்ட்ரம்’ எனும் கழுத்து தொடர்பான நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இது பெரும்பாலும் திறன்பேசி, கணினி போன்ற தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தும்போது, தலையை முன்னோக்கி அல்லது கீழ்நோக்கிய நிலையில் அதிக நேரம் வைத்திருப்பதால் கழுத்தில் ஏற்படும் அழுத்தம் காரணமாக உண்டாகும் நோய்.
கழுத்துத் தசை விறைப்பு, தொடர்ந்து ஏற்படும் கழுத்து வலி போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.
கட்டுமானத் துறையில் பணியாற்றும் 34 வயதான திரு ஜோனத்தன் வோ, 2020ஆம் ஆண்டில் கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக தனது திறன்பேசியோடு அதிகம் ஒன்றிப்போனார். அக்காலகட்டத்தில், வீட்டிலிருந்தே பெரும்பாலானோர் வேலை செய்ததால் அவர்களுடைய வாழ்க்கைமுறை பெரிய அளவு உடல் செயல்பாடு இல்லாததாக மாறியது.
அந்த நேரத்தில், வோ பெரும்பாலான அலுவலகப் பணிகளைத் திறன்பேசி மூலமும் கணினி மூலமும் செய்து முடித்தார்.
“நான் ஒரு கெட்ட பழக்கத்தை வளர்த்துக் கொண்டேன். அதாவது, வீட்டிலிருந்து வேலை செய்தபோது எனது கழுத்தை ஒரே பக்கமாகச் சாய்த்து, ஒரே கோணத்தில் நீண்டநேரம் வைத்துகொண்டு கைப்பேசியில் வரும் அழைப்புகளுக்குக் கணினியில் வேலை பார்த்துகொண்டே பதிலளிப்பேன்,” என்றார் திரு வோ.
அதன் தீவிரத்தை உணர்வதற்குள் அவருக்குக் கடுமையான கழுத்து வலி மற்றும் தலைவலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு உறங்குவது, வாகனம் ஓட்டுவது போன்ற அன்றாடப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.
திரு வோ போலவே பெரும்பாலானோர் இதுபோன்ற நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் இளையர்கள் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நோய் வராமல் தடுப்பது எப்படி
தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தும்போது ஒரே பக்கமாகச் சாய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் கழுத்தை முன்னோக்கி சாய்ப்பதைத் தவிர்க்க, சாதனங்களைக் கண் மட்டத்திற்கு உயர்த்தவும்.
உடலைச் சரியான நிலையில் வைக்க மடிக்கணினி சரியான நிலையில் வைக்க உதவும் கருவி, உயரத்தைக் கூட்ட அல்லது குறைக்க போன்ற வசதிகள் அடங்கிய நாற்காலி போன்ற தொழில்நுட்ப கருவிகளை வாங்கிப் பயன்பெறுங்கள்.
மின்னிலக்க சாதனத்தைப் பயன்படுத்தும்போது, குறைந்தது 1 மணி நேரத்திற்கு 10 நிமிடங்கள் இடைவெளி எடுக்க வேண்டும். தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்தது 20 நிமிடங்கள் வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை. உங்கள் கழுத்து மற்றும் முதுகு பகுதியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க இது உதவும்.