சிங்கப்பூரைத் தொடர்ந்து சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் வகையில் பொதுச் சுகாதார மன்றத்தின் திட்டத்தில் ஓசிபிசி வங்கி, போக்குவரத்து சேவையில் உள்ள எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் உட்பட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்துள்ளன.
நிறுவனங்களின் ஆதரவால் வரும் தொண்டூழியர்கள் நாட்டை ஆண்டு முழுவதும் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டுக்கான ‘சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்’ இயக்கம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) தொடங்கியது. நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஏமி கோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது நிறுவனங்கள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டது.
மேலும் 2025ஆம் ஆண்டு முதல் ‘எஸ்ஜி தூய்மை நாள்’ இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது ‘எஸ்ஜி தூய்மை நாள்’ மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெறுகிறது.
‘எஸ்ஜி தூய்மை நாள்’ அன்று, தேர்ந்தெடுக்கப்படும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகள், பொதுப் பூங்காக்கள், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் மற்றும் சில பொது இடங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடக்காது.
“பொதுவாக ‘சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்’ இயக்கம் ஆண்டிற்கு ஒரு மாதம் மட்டுமே நடக்கும். ஆனால் திட்டத்தில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் இயக்கத்தின் நடவடிக்கைகளைத் தொடரமுடியும். எடுத்துக்காட்டாக நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களை ஈஸ்ட் கோஸ்ட் அல்லது மற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று குப்பைகளை அகற்றலாம். எங்கள் திட்டத்தில் நிறுவனங்களை இணைத்துக் கொண்டது ஒரு முக்கியமான ஒன்று,” என்று பொதுச் சுகாதார மன்றத்தின் தலைவர் ஆண்ட்ரூ கிங் தெரிவித்தார்.
இயக்கத்தின் அறிவிப்பின்போது மன்றமும் ஓசிபிசி வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
ஒப்பந்தத்தில் சுத்தம் செய்யத் தேவையான பொருள்களை வைக்க அமைக்கப்பட்டுள்ள 19 துப்புரவுக் கருவிகள் பகிர்வுக் கூடங்களில் (கிளீன்பாட்ஸ்) நான்கை ஓசிபிசி தத்தெடுத்துக்கொண்டது. கிளீன்பாட்ஸ் வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகள், பொதுப் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும்.
‘சிங்கப்பூரைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்’ இயக்கம் 1968ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு இயக்கம் ஏப்ரல் 28ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை தொடரும். அதில் தீவு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 70 இடங்களில் குப்பைகள் அகற்றும் நடவடிக்கைகள் நடைபெறும்.