ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மே 10ஆம் தேதி பிற்பகல் எட்டு வாகனங்கள் தொடர்ச்சியாக மோதிக்கொண்டதையடுத்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
சம்பவ நாளன்று நண்பகல் 12.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
மரினா கோஸ்டல் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் அலெக்ஸாண்ட்ரா ரோட்டுக்கு முன்பாக அவ்விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.
ரெட்டிட் இணையத்தளத்தில் விபத்து நடந்த இடத்தைக் காட்டும் காணொளி பதிவேற்றப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையின் வலத் தடத்தில் இருப்பதையும் அந்தப் பகுதியில் போக்குவரத்துத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பதையும் அக்காணொளியில் காண முடிகிறது.
சாலையிலிருந்து வாகனத்தை அப்புறப்படுத்த உதவும் ‘இமாஸ்’ மீட்பு வாகனம், குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவி வாகனங்கள் இரண்டு ஆகியவை அங்கிருப்பதைக் காணொளி காட்டுகிறது.
விபத்தையடுத்து கார் ஓட்டுநரான 25 வயது ஆடவர் ஒருவரும் 37 வயதுப் பெண் பயணியும் சிகிச்சைக்காகத் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அப்போது அவர்கள் இருவரும் நினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.