இரு கார்கள், ஒரு வேன் சம்பந்தப்பட்ட விபத்தில் சிக்கிய 22 வயது ஆடவர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டி காயம் ஏற்படுத்தியது ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈசூன் அவென்யூ 1 - அவென்யூ 6 சந்திப்பில் புதன்கிழமை (ஜூன் 11) காலை காலை 6 மணிக்கு விபத்துக் குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.
‘சிங்கப்பூர் சாலை விபத்து’ ஃபேஸ்புக் பக்கத்தில் விபத்துக்குப் பின்னர் வெளியிடப்பட்ட படங்களில், வெள்ளை வேன் ஒன்று பக்கவாட்டில் புரண்டு கிடப்பதையும் அதன் அருகே சிவப்பு நிற கார் நிற்பதையும் காணமுடிகிறது. பின்னணியில் மூன்று காவல்துறை வாகனங்களையும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தையும் காணமுடிகிறது.
காரில் பயணம் செய்த 38 வயது ஆடவர், 60 வயது ஆடவரான வேன் ஓட்டுநர், வேனில் சென்ற 58 வயது பெண் பயணி ஆகியோர் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மற்றொருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. ஆனால், அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
புதன்கிழமை பிற்பகலில், சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் நிகழ்ந்த பல வாகன விபத்தைத் தொடர்ந்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தாம்சன் ரோடு வெளியேற்றத்துக்கு முன்னதாக விபத்து நிகழ்ந்தது. இரு கார்கள், ஒரு லாரி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை அந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தன.
சம்பவம் குறித்து பிற்பகல் 1 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினரும் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் சாலை விபத்து ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட சம்பவத்திற்குப் பிறகான காணொளியில், சாலைத் தடுப்புக்கு அருகே ஒரு கார் கவிழ்ந்து கிடக்கிறது. செம்ப்கார்ப் லாரி, சேதமடைந்த பின்பக்கத்துடன் கூடிய ஒரு காரும் அருகில் காணப்படுகின்றன.
52 வயது கார் ஓட்டுநர், 22 வயது மோட்டார்சைக்கிளோட்டி இருவரும் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மற்றொரு ஓட்டுநரான 35 வயது மாது விசாரணையில் உதவி வருகிறார்.
இவ்விரு விபத்துகள் குறித்த விசாரணை நடைபெறுவதாக காவல்துறை தெரிவித்தது.

